திங்கள், 27 ஜூலை, 2015

வேலிப்பருத்தி என்னும் உத்தாமணி கொடி

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். வேலிப்பருத்தி என்னும் உத்தாமணி மூலிகை பற்றி அறிந்துகொள்வோம்.
                      கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகைகளாகும். அத்தகைய மூலிகைகளில் வேலிப்பருத்தி என்ற உத்தாமணியும் ஒன்று.               உத்தாமணி அதிக மருத்துவக் குணம் கொண்டது. இது தென்னிந்தியா முழுமையும் காணப்படும். வேலி ஓரங்களில் கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர். இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

 வேலிப்பருத்தி முழு தாலாற் பற்றாது வேலிப்பரு
                                   என்கிறது சித்தர் பாடல்

           உத்தாமணி வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள், தோஷ விடங்கள் நீங்கும்.

ரத்த அழுத்தத்தைத் தணிக்க:
           வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 – 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண்டும் கிடைக்காவிட்டால், கொதிக்க வைத்த பால் அரை டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து 21 நாட்கள் அல்லது 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். இம்மருந்து எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும். இது பற்றி அகத்தியர் பரிபூரண நூலில் ஆரோக்கியத்திற்கு அற்புதமான மருந்து என்ற பகுதியில் கூறியுள்ளார். வர்ம பரிகார முறையில் இதுவே சிறந்த மருந்தாகும். மேலும் உடல் அசதியைப் போக்கும். நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்யும். நெஞ்சுலி குறையும்.

நோஞ்சான் குழந்தைகளுக்கு:
            சிறு குழந்தைகளுக்கு மார்பெலும்புக்கூடு முன்தள்ளி, நோஞ்சான் போல காணப்படுவார்கள். இவர்களுக்கு, வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் 1 ஸ்பூன், அருகம்புல் பொடி 1 ஸ்பூன் சேர்த்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வந்தால், நோஞ்சான் தன்மை மாறி, உடல் வலுப் பெறுவார்கள்.

வயிற்றுப்புழு நீங்க:
               குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவர்களின் வளர்ச்சி பாதிப்படைந்து நோஞ்சான் போல் காணப்படுவார்கள். இந்த வயிற்றுப் புழுக்களை நீக்க உத்தாமணியின் இலையை பறித்து நீர்விட்டு அலசி குடிநீராக செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும். ஒரு மண்டலம் கொடுத்தால் வயிற்றில் புழுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.

          உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.

           உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.

                உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.

                பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.

உத்தாமணி இலைச்சாறு – 5 மி.லி.
தூதுவளைச் சாறு – 5 மி.லி.
துளசிச் சாறு – 5 மி.லி.
கற்பூரவள்ளி இலைச்சாறு – 5 மி.லி.
வெற்றிலைச்சாறு – 5 மி.லி.
எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் சலதோஷம், மூக்கடைப்பு, இருமல், இரைப்பு நீரேற்றம் போன்றவை நீங்கும்.
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
வேலிப்பருத்திச் சாறு – 100 மி.லி.
கற்பூரவள்ளி இலைச்சாறு – 200 மி.லி
தேங்காய் எண்ணெய் – 300 மி.லி.
இவற்றை ஒன்றாகச்சேர்த்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு, அடிபட்ட இடங்கள், வீக்கங்கள் மீது தடவி வந்தால் எளிதில் குணமாகும். இந்த வைத்திய முறை பழங்காலந்தொட்டே வழக்கமாக இருந்து வருகிறது.

         சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக