திங்கள், 2 நவம்பர், 2015

சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு?

 

மரியாதைக்குரியவர்களே,

வணக்கம். சித்த மருத்துவ உண்மை பற்றி தெரிந்துகொள்வோம்.

தேவையற்ற பதற்றமும் அறிய வேண்டிய உண்மைகளும்

புதிதாக யாரிடமாவது சித்த மருத்துவம் பற்றியோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குச் சித்தத்தில் நல்ல மருந்து இருக்கிறது என்றோ சொன்னால், உடனடியாக அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? படித்தவர் முதல் பாமரர்வரை உடனடியாக வேதியியல் பேராசிரியர்போல மாறி ‘அதில் மெட்டல் கலக்கிறார்களே. அதெல்லாம் சரிதானா என யோசிப்பார்கள். மக்களிடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் இந்த மூடநம்பிக்கை தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது.
மருத்துவர் யார்?
‘சித்த மருந்துகளில் மெர்குரி கலந்திருக்கிறது' என்றொரு சர்ச்சைக்குரிய செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் சமீபகாலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. நாளிதழ் ஒன்றிலும் அந்தச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னூட்டமாக ‘சித்த மருந்துகள் எதுவும் தரநிர்ணயம் செய்யப்படாதவை' என்பது போன்ற அவதூறுகளும் வேகமாகப் பரவி வருகின்றன.
மருத்துவ முறை வழிகாட்டுதலின்படி ஒரு நோயாளியின் சிகிச்சை அறிக்கையின் அடிப்படையில், மருந்துகளால் ஏற்படும் எந்த ஒரு பின்விளைவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை (Pharmacovigilance) எடுக்கப்பட வேண்டும். இது சித்த மருத்துவத்துக்கும் பொருந்தும். அந்த வகையில் சர்ச்சைக்குரிய சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டத்தைப் பெற்ற சித்த மருத்துவராகவோ, பாரம்பரியச் சித்த மருத்துவராகவோ தெரியவில்லை. அந்த மருத்துவரின் தகுதி குறித்து முறைப்படி விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, மருந்துகளைப் பரிந்துரைக்கத் தகுதி இல்லாத போலி மருத்துவர் ஒருவர் செய்த தவறுக்கு, ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையையே நம்பிக்கையற்ற ஒன்றாக ஊடகங்களில் சித்தரிக்கும் போக்கு வருத்தம் தரும் அதேநேரம், கண்டிக்கத்தக்கதும்கூட.
வேர், மூலிகை
அந்தச் சர்ச்சையில் குறிப்பிட்டுள்ள மிகவும் தவறான பொய்ச் செய்தி, ‘எல்லாச் சித்த மருந்துகளும் செய்து முடித்த பின்னர் மெர்குரியை (பாதரசத்தை) கலந்து தருகிறார்கள்' என்பதுதான். அப்படி ஒரு வழக்கம் எந்தச் சித்த மருத்துவச் செய்முறையிலும் கிடையாது. பொதுவாகவே சித்த மருந்துகளில் கனிமங்களின் பயன்பாடு மிகவும் சொற்பம். அப்படியே இருந்தாலும் முக்கிய, நாட்பட்ட, பிற மூலிகைகளால் குணப்படுத்த இயலாத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் உயர் சித்த மருந்துகளில் மட்டும்தான் உள்ளது.
"வேர்பாரு தழைபாரு, மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே"- என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை இலக்கணம். அதன்படி வேர், மூலிகைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு நோயைத் தீர்க்க இயலாதபட்சத்தில் கடைசிப் பெருமருந்தாக மட்டுமே உப்புகளை, கனிமங்களைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகளைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட சம்பவத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், மருந்துகளைச் செய்துமுடித்துவிட்டு ஒருபோதும் கனிமங்கள் கலக்கப்படுவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மாறாக, ஒரு சில உயர் மருந்துகளில் மருத்துவ மூலப்பொருளாக மட்டுமே சில கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கனிம உருமாற்றம்
சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, ஏன் பெரும்பாலோர் நம்பும் நவீன மருத்துவத்திலும்கூட நேரடி கனிம - ரசாயன மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே சில மருந்துகளின் செய்முறைகள் தொடங்கப்படுகின்றன. அந்தந்த மருத்துவத் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி (National Pharmacopoeia / Formulary Guidance) கடைசியில் அம்மருந்துகள் முறைப்படியான மருந்து வடிவத்தை வந்தடைகின்றன. கடைசியாகப் பயனுக்குரிய மருந்தாக அது மாறும்போது, கனிம மூலக்கூறு வடிவில் இல்லாமல் உப்புகளாக, உடலுக்குத் தீங்கு செய்யாத வடிவத்துக்கு மாறியும் இருக்கும்.
பல்வேறு மூலிகைச் சாறுகளில் பல மணி நேரம் ஊற வைத்தும், பல நாட்கள் அரைத்தும், சாண வறட்டியில் புடமிட்டும்தான் இம்மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பத்தில் பல்லாயிரம் டிகிரி மிகை வெப்பத்திலும், பெரும் அழுத்தத்திலுமே நானோதுகள்களைப் பெற முடியும் என்றுள்ள நிலையில், 100 வறட்டிகளை வைத்துப் புடமிட்டு ஒரு உயர் கனிமத்தை நானோதுகள்களாகப் பெற்ற சித்த மருத்துவ நுட்பத்தை நவீன விஞ்ஞானம் இன்றைக்கும் மெய்சிலிர்த்துத்தான் பார்க்கிறது. இப்படிப்பட்ட நவீன நானோதுகள்களின் மருத்துவப் பயன்கள் ஏராளம்.
உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி
கனிமங்களை மூலப்பொருளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மருந்துகள், நானோ துகள்களாக நுண்மையடைந்து மருந்தாக மாறுவதைப் பல மருத்துவ நூல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் (Standardization of Metal-Based Herbal Medicines, American Journal of Infectious Diseases 5 (3): 200-206, 2009 ISSN 1553-6203 © 2009 Science Publications Corresponding Author: Arun Sudha, Indian Institute of Technology Madras, Chennai- 600 036), பெரும்பாலான மூலிகைகளில் உள்ள கனிமங்கள் உடலைப் பாதிக்காத ஆக்சைடு மற்றும் சல்பைடு வடிவத்தில் மாறுவதாகவும், நேரடியாகக் கனிமங்களை வைத்தே செய்யப்படும் மருந்துகளும்கூட நானோதுகள்களைப் போன்ற நுண்ணிய அளவில் இருப்பதையும் உறுதிசெய்துள்ளது.
அது மட்டுமல்லாமல் மெர்குரி (பாதரசம்), கந்தகத்தை வைத்துச் செய்யப்படும் மிக முக்கியமான சித்த மருந்தான ரசகந்தி மெழுகு குறித்து இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. குஜராத் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் உயரிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆய்வு நிறுவனமும், நவீன ஆய்வு வழிகாட்டுதலின்படி ஒரு நீண்ட ஆய்வை நடத்தி, ரசகந்தியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சென்னையில் இயங்கிவரும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான மறைந்த பேராசிரியர் சரஸ்வதி நடத்திய ஓர் ஆய்வில், பாதரசத்தை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் மருந்து மிகப் பாதுகாப்பானது என நிறுவப்பட்டுள்ளது (அந்த முடிவுகள் இன்னும் நூலாக வெளியிடப்படாமல், அரசு ஆவணமாகவே உள்ளன).
வியந்த உலகம்
மறைந்த நவீன மருத்துவப் பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம், இதே ரசகந்தி மெழுகைக் கொண்டுதான் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் கிருமிகள் கட்டுப்படுத்தப்படுவதையும், நோய் எதிர்ப்பாற்றல் பெருகுவதையும் பற்றி நீண்ட ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வு JAPI எனும் மருத்துவ இதழில் வெளியாகி, உலக மருத்துவத்தின் கண்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் திருப்பப்பட்டன.
இதைத் தாண்டி கனிம மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள்தாம் புற்றுநோய் முதலான சவாலான நோய்களுக்கான மிக முக்கிய சித்த மருந்துகள். Acute promyelocytic leukemia எனும் புற்றுநோய்க்கு இன்றளவும் பெரும் நச்சாகக் கருதப்படும் பாடாணங்களை (Arsenic trioxide) கொண்டு செய்யப்படும் சீன மருந்துகளின் பயன், உலகளவில் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரம்வாய்ந்த British Journal of Haematology எனும் மருத்துவ இதழில், இதன் பயன் குறித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் (Mathews V, Chandy M, Srivastava A. Arsenic trioxide in the management of acute promyelocytic leukaemia. Natl Med J India. 2001;14(4):215-22) கட்டுரையில் கிடைக்கின்றன.
தேவையற்ற குழப்பம்
இன்று சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அரசு பதிவுபெற்ற சித்த மருந்துகளில், மத்திய அரசின் வழிகாட்டுதலில் (AYUSH- Good Manufacturing Practice guidelines) சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரநிர்ணயத்தின் அடிப்படையிலேயே கனிமங்களின் அளவு, வடிவம், செய்கை, நச்சற்ற பாதுகாப்பு நிலை போன்றவை இருந்தாக வேண்டும். ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனமும் அதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை (Quality assurance) மேற்கொண்டு ஆவணப்படுத்த வேண்டும். இதில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய Pharmacovigilance முறை மத்திய, மாநில அரசுகளால் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் எதைப் பற்றியும் அறியாமல், சர்ச்சைக்குரிய சம்பவத்தை விவரிக்கும் செய்தி போலியாய் எச்சரிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையைக் களங்கப்படுத்தும் தொனியிலும், சித்த மருத்துவப் பயனாளர்களைக் குழப்பத்தில் தள்ளும் வகையிலும் உள்ளது.
எத்தகைய மாற்றம் தேவை?
அறம் சார்ந்து சித்த மருத்துவத்தை மேற்கொண்டுவரும் சித்த மருத்துவர்களால் மக்களுக்கு, மருத்துவப் பயனாளிகளுக்கு எவ்விதத் தீங்கும் நிகழக் கூடாது என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. அதற்குச் சித்த மருத்துவம் தொடர்பாக உலகத் தரத்துடன் Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்தப்படவேண்டும் என்பதுதான் சித்த மருத்துவத்தை மேம்படுத்த நினைக்கும் பெரும்பாலோரின் நிலைப்பாடும் முயற்சிகளும்.
ஒரு மருந்து பழமையானது என்பதாலோ, நம்முடைய மரபு என்பதாலோ கொண்டாடாமல், Reverse pharmacology முறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் தவறென்று தெரியவரும் எந்த மருந்தையும் விலக்கி வைக்கவும் நவீன காலச் சித்த மருத்துவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
ஆனால், அதேநேரம் நம் நாட்டு மருத்துவ முறைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல் அவசரமாக இன்றைக்கு வலிந்து வலியுறுத்தப்படும் தரநிர்ணயத்தின் பின்னணியில் பெரும் அரசியல் உள்ளதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தரநிர்ணயங்கள் மக்கள் நலனை மையப்படுத்தியவை அல்ல. பெரும் வணிகச் சந்தையை மையப்படுத்தியவை என்ற உண்மையையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடையே மரபு மருத்துவ முறைகள் முக்கியத்துவம் பெற்றுவரும் பின்னணியிலேயே இது வலியுறுத்தப்படுகிறது.
நமது மரபு மருத்துவ முறைகள் சார்ந்து Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்த அரசிடம் வலியுறுத்துவது அவசியம். அப்படியல்லாமல், ஒரு சில போலி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறை மீது பழிசுமத்துவதும் அந்தத் துறையையே பலியிடச் சொல்வதும் எந்த வகையில் நியாயம்? காலம்காலமாகப் புடம் போடப்பட்டுவரும் சித்த மருத்துவத் தத்துவங்களையும், நெடுங்காலமாகப் பயனில் உள்ள ஆவணங்களையும், அவசரஅவசரமாகப் புறந்தள்ளி, நவீன மருத்துவம் காட்டும் மாற்றத்துக்குரிய ஆய்வுகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு பயன்பட்டுவரும் சித்த மருத்துவத்தை வீணாகத் தூற்றுவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
2015அக்டோபர் 31ந் தேதியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி. 

சனி, 22 ஆகஸ்ட், 2015

கவிழ்தும்பை மருத்துவத் தாவரம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கவிழ்தும்பை பற்றி காண்போம்.


                   குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன.
நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.
இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல் பாட்டை ஊக்குவிக்கின்றன.
கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும். கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.

பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை…

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். பேய் மிரட்டி மருத்துவத்தாவரத்தின் பயன்களை காண்போம்.



            சில குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது கழிச்சல் உண்டாகும். மேலும் குழந்தைகள் ஆறாம் மாதத்தில் தவழும் போதும், எட்டாம் மாதத்தில் எழுந்து நடக்கும் போதும் அருகில் கண்களில் படும் ஒற்றடை, தூசி, இறந்து போன பூச்சிகள், கொசுக்கள், ரோமங்கள் போன்றவற்றை துருதுருவென்ற தங்கள் கண்களால் கண்டுபிடித்து உட்கொண்டு விடுவது குழந்தைகளின் வழக்கம். இதனால் குழந்தைகளின் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, பேதி, சுரம் அதை தொடர்ந்து வலிப்பு, இருமல் உண்டாவதுடன் திடீர் திடீரென வீறிட்டு அழ ஆரம்பிக்கும். மேலும் தோல் வறட்சியடைந்து, சுருங்கி சவலைப் பிள்ளைப் போல் தேறாமல் காணப்படும்.
இதைக்கண்டு பயந்து போகும் பெற்றோர் பேய்,பூதம் என பலவாறாக கற்பனை செய்து கோயில்களிலும், பிற வழிபாட்டு தலங்களிலும் நேர்த்திகளை செய்கின்றனர். இன்னும் சிலரோ முதியோர்களையும், ஆன்மீகவாதிகளையும் அணுகி, குழந்தையின் பயத்தை போக்க, மந்திரிக்கும்படி கூறுகின்றனர். அவர்களும் கயிறு போன்ற சில பொருட்களை கொடுத்து குழந்தையின் மணிக்கட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் கால்களில் தாயத்து போல் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு கட்டும் பொருட்களில் பெரும்பாலும் மூலிகை வேர்களே அடங்கியுள்ளன.
இந்த மூலிகை வேர் நிறைந்த தாயத்துகளை குழந்தை வாயிலிட்டு சப்பும்போதும், மூக்கால் உறிஞ்சும்போதும் அவற்றின் மருத்துவ குணத்தால் குழந்தையின் உபாதைகள் நீங்குகின்றன.
குழந்தைகளுக்கு தோன்றும் இது போன்ற நோய்களை கட்டுப்படுத்தி, உடலை நன்னிலைப்படுத்தும் அற்புத மூலகை பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை. அனிசோமீல்ஸ் மலபாரிக்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும் பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் வேரில் பீட்டா சைட்டோஸ்டீரால், லுட்டுலினிக் அமிலம், ஓவாடியோலிட், அனிசோமிக் அமிலம், ஜெரானிக் அமிலம் ஆகியன உள்ளன. இவை செரிமானத்தை தூண்டி, குடலின் இயங்கு தன்மையை கட்டுப்படுத்துகின்றன.
பெருந்தும்பை இலைகள்-5 எடுத்து சிறு,சிறு துண்டுகளாக வெட்டி, 200 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 50 மி.லி.,யாக சுண்டியப்பின். வடிக் கட்டி காலை, மாலை குழந்தைகளுக்கு கொடுத்து வர பேதி, செரிமானமின்மை நீங்கி தெளிவுறும், 5 அல்லது 10 சொட்டுகள் இந்த இலைச்சாற்றை தேனுடன் குழப்பிக் கொடுக்க, பல் முளைக் கும் காலங்களில் தோன்றும் பிள்ளைக்கழிச்சல் நீங்கும். இதன் வேரை சுத்தம் செய்து உலர்த்தி, நூலில் சுற்றி மணிக்கட்டில் காப்பு போல் கட்டிவர குழந்தைகள் விரல் சப்பும் பொழுது இதன் மருத்துவச் சத்துக்கள் உள்ளிறங்கி, குழந்தைகளுக்கு வயிற்றில் தோன்றும் பலவித வயிற்று உபாதைகள், பயம் ஆகியவற்றை நீக்கி குழந்தையை தேறச் செய்யும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

சளித் தொல்லைக்கு மருந்து.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். சளித்தொல்லையா கவலைப்படாதீங்க..
                       வேலிப்பருத்தி என்னும்   உத்தாமணி இலைச்சாறு 5 மில்லி, தூதுவளைச் சாறு 5 மில்லி, துளசிச் சாறு 5 மில்லி கற்பூர வள்ளி இலைச்சாறு 5 மில்லி வெற்றிலைச்சாறு 5 மில்லி எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும். 
எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடியுங்க,சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச்சை சாற்றை காபியில் கலந்து குடியுங்க தலைவலி நீங்கும்.எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்கவைத்து குடியுங்க நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
கடல் அழிஞ்சில் பட்டை,திப்பிலி,தாளிசபத்திரி இம்மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இவற்றில் தினமும் இரண்டு கிராம் பொடியை இரண்டு வேளை வீதம் தேனில் குழைத்து சாப்பிடுங்க,சளி,தும்மல்,இருமல்,அலர்ஜி ஆகியவை காணாமல் போகும்.
 அரைக்கீரை தண்டுடன் மிளகு,மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில்  குடியுங்க சளி,இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.
ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடுங்க சளித்தொல்லை குணமாகும்.
ஆலமர விழுதை பொடி செய்து காலை மாலை இருவேளை சாப்பிடுங்க இருமல் குணமாகும்.
அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிடுங்க மார்புச்சளி குணமாகும்.
கடுகை பொடி செய்து தொண்டையில் பற்று போடுங்க தொண்டை வலி குணமாகும்.
வெள்ளைப்பூண்டு பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடுங்க சளித்தொல்லை நிங்கிவிடும்.
பூண்டு,சிறிது புளி,மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிடுங்க..சளித்தொல்லை குணமாகும்.
மிளகாய் வற்றல்,தேங்காய்த்துருவல் இரண்டையும் ஒருநாள் முழுவதும் வெயிலில் காயவைத்து பிறகு அவற்றுடன் தோலுரிக்காத பூண்டு,உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிடுங்க.சளித்தொல்லை நீங்கும்.

வியர்வை நாற்றமா?

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். வியர்வை நாற்றமா கவலையே வேண்டாம். எலுமிச்சை 
வியர்வை நாற்றத்தை நீக்கும் .அரைப்பழம் எலுமிச்சையை உடல் முழுவதும் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளியுங்க.குளிக்கும்போது சோப்பு போடாதீங்க,குளித்த பிறகு எவ்வித வாசனை திரவியங்களோ,பவுடரோ பயன்படுத்தாதீங்க. காலை முதல் மாலை வரை உடலில் வியர்வை நாற்றம் வருகிறதா? என சோதித்துப் பாருங்க..தினமும் எலுமிச்சை பழம் உடலுக்கும்,தலைக்கும் தேய்த்துக்குளியுங்க..முடிந்தவரை மாமிச உணவுகளையும்,மைதா மாவு சம்பந்தப்பட்ட உணவுவகைகளும் தவிருங்க..மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்க வியர்வை நாற்றமும் பெருமளவு குறையும்...

மூலிகைக் குடிநீர்-

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். மூலிகைக்குடிநீர் தயாரிக்கும் முறை மற்றும் மருத்துவப் பயன்கள் பற்றி காண்போம்.
சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும்.  அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.
                              மூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநீர்.

                     ஒரு பாத்திரத்தில் தேக்கரண்டி மூலிகை பொடியை நான்கு லிட்டர் சுத்தமான நீருடன் கலந்து கொதிக்க வைக்கவும்.
கொதி நிலையை அடைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு மூடியால் மூடி ஆற விடவும்.
தேவைப்பட்ட நேரத்தில் இளஞ்சூடாகப் பருகவும்.
இது போல பொடி கிடைக்காவிட்டால் நீங்களே கீழ்க்கண்டவற்றை தயாரிக்கலாம்: ஒரு தேக்கரண்டி:
சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்தால் சீராகக் குடிநீர் கிடைக்கும்.
சீரகம், தனியா விதைகள் சேர்த்துக் கொதிக்க வைத்தால் தனியா சீராகக் குடிநீர் கிடைக்கும்.
உலர்ந்த துளசி இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக் கொதிக்க வைத்தால் துளசி குடிநீர் கிடைக்கும்.
உலர்ந்த வல்லாரை இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக் கொதிக்க வைத்தால் வல்லாரை குடிநீர் கிடைக்கும்.
மாம்பட்டை, நெல்லிப்பட்டை, கரிஞ்ஞாலி வேர் இவற்றை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டால் மூலிகைக் குடிநீர் கிடைக்கும்


மூலிகைக் குடிநீரால் கிடைப்பதாகச் சொல்லப்படும் பலன்கள்:
                               ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இளஞ்சூடான சீரகக் குடிநீர் குடிப்பது இரத்த ஓட்டம் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரி செய்து வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சமன் படுத்தும் என்று சொல்கிறது.
இளஞ்சூடான சீரகக் குடிநீர் உடம்பிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
இதன் நோய் எதிர்ப்பு சக்தி காய்ச்சல், சளி, தும்மல் போன்ற உபாதைகளை அண்டவிடாமல் தடுக்கிறது.
தொண்டைக்கு இதமளிக்கிறது.
வயிற்றுப் பொருமல், உப்புசம், வாந்தி, பேதி, காலையில் தோன்றும் பித்தம், தலை சுற்றல் ஆகிய எல்லா துன்பங்களுக்கும் சிறந்த பானம்.
தூக்கமின்மை தீர்த்தல்
உடம்பின் செரிமான சக்தியை தூண்டும் விதமாக உடல் வெப்பத்தையும் சீராக்கும்.
இதில் உள்ள வைட்டமின் 'இ' உயிர் சத்தும், பிற இன்றியமையாத எண்ணெய் சத்துக்களும், நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சை காளான்களைக் கூட மட்டுப்படுத்துகிறது.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது பால் சுரப்பை சமன்படுத்தும்.


=============================================================

        இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.  இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.  பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது.  இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன.  இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.  உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள்  கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும்  தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர்,  கரிசாலை குடிநீர்,  நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர்,  சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.

ஆவாரம்பூ குடிநீர்

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

என்ற மருத்துவப் பழமொழி உண்டு.  ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.  இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.  மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில்  ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து  வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்


துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும்.  இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.  தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும்.  இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர்.  இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து  அனைவரும்  அருந்தலாம். 

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும்.  இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும்.  நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும்.  தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்

“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான  இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது.  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.  இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்

சீர்+அகம் =சீரகம்.  அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.

 ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

கண் சூடு குறைக்கும்.  வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

சரும நோய்கள் வராமல் தடுக்கும்.  இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்

மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும்.  அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்

நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  உடல் சூட்டைத் தணிக்கும்.  குடல்புண்களை ஆற்றும்.  மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் குடிநீர்

ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

அதிர்ச்சியூட்டும் தகவல் தங்களது சிந்தனைக்காக...

  அழியும் நிலையில் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள்....
மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். வனவிலங்குகள் மற்றும் மருத்துவ மூலிகைகள் பற்றி அறிவோம்.அவற்றை பாதுகாப்போம் என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பினை துவக்கியுள்ளோம்.
                உலகில் 56,441 வனவிலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா. சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பானது (ஐ.யூ.சி.என்.) அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங் களைக் கண்டறிந்து உலகுக்கு அறிவிக்கும். அந்த வகையில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற இந்த அமைப்பின் ஆய்வில், உலகில் 56,441 வனவிலங்குகள், 19,738 தாவரங்கள் என 76,179 உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
அழிந்துவரும் விலங்குகள்
இதுகுறித்து திண்டுக்கல் வன உயிரினங்கள் ஆர்வலர் டாக்டர் ராம சுப்பு `தி இந்து’விடம் கூறியதாவது: ‘‘உலகளவில் இந்தியாவில் 4,850 வன விலங்குகள், 2,119 தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. போடிநாயக்கனூர் மலையில் நடமாடும் ராவோ செஸ்டஸ் டிராவன் கோரிக்கஸ் என்ற ஒரு வகை தவளை யினம் முற்றிலும் அழிந்துவிட்டது. மெட்ராஸ் ஸ்பாட்டட் அரணை, நம்தபா பறக்கும் அணில், புதுச்சேரி சுறா, சும்த்ரன் காண்டாமிருகம், காரியல் வகை முதலை, கங்கை சுறா, இந்திய கழுகு, ராமேசுவரம் பாராசூட் சிலந்தி, குள்ளப்பன்றி, இந்தியன் பஸ்டர்டு உள்ளிட்டவை மிகவும் மோசமான நிலையில் அழிந்துவருகின்றன.
கொடி நாகம், இந்திய நீர் எருமை, குரைக்கும் மான், பச்சை ஆமை, ஆசியா யானை, ஆசியா காட்டுநாய், களக்காடு பாறை கெண்டை மீன், இந்திய எறும்புத் திண்ணி, சிறுத்தை, நீலகிரி பைபட், ஆசியா சிங்கம், புலி மற்றும் பனிச்சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அழியும்தருவாயில் உள்ளன.
சர்வதேச சந்தையில் வனவிலங் குகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தை மதிப்பு, அவற்றில் இருந்து தயாரிக் கப்படும் மருந்து பொருட்களுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள வர வேற்பு போன்றவை வனவிலங் களின் அழிவுக்கு முக்கிய காரணம். மேலும், காடுகளை அழித்து விளை நிலங்கள், சுற்றுலாத் தலங்கள் அமைப்பது, காட்டுத் தீ, அந்நிய களைச் செடிகள் அதிகரிப்பு, சட்டவிரோதமாக வேட்டையாடுதல் போன்றவற்றால் காடுகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
காடுகளில் மனித நடமாட்டம் அதிகரிப்பதால் வனவிலங்குகளின் இனப்பெருக்கத் திறன் குறைகிறது. 75 சதவீத வனவிலங்குகள் தாவரங் களைச் சார்ந்துள்ளன. ஒரு தாவ ரம் அழிந்தால் அவற்றை சார்ந் திருக்கும் வனவிலங்குகளும் அழிகின்றன.
குறிப்பாக சிங்கவால் குரங்கு `குள்ளிநியா’ என்ற ஒரு வகை மரத்தைச் சார்ந்துள்ளது. தற்போது இந்த மரங்கள் அழிவதால் சிங்க வால் குரங்குகளும் அழிந்து வருகின் றன.
பறவைகள், விலங்குகளை அலங்காரத்துக்காக பிடித்து வைத்து கூண்டுகளில் வைப்பதா லும் அவை அழிகின்றன.
உலகிலேயே சீனாவில் வன விலங்குகளின் உடல் உறுப்புகளில் இருந்து அதிகளவு இயற்கை மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவர்களுடைய இயற்கை மருத்து வமானது முழுக்க முழுக்க வனவிலங்குகளைச் சார்ந்துள்ளது. புலியின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண் களின் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதாக அவர்கள் நம்புகின் றனர். பாம்புகளை பாட்டிலில் அடைத்து அதில் ஒயினை ஊற்றி பாம்பு ஒயின் தயாரிக்கின்றனர்.
இதேபோல், காட்டெருமை, காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைமுடி, தந்தம், கரடியின் கணைய நீர், தேவாங்கு தோல், நரியின் தலைப்பகுதி எலும்பு போன்றவற்றில் இருந்து சீனாவில் மருந்துகள் தயாரிக்கப்படு கின்றன.
பறவைகள் தங்களுடைய எச்சத் தின் மூலம் கூடுகளை கட்டுகின்றன. அந்த கூடுகளில் அதிக மருத்துவ குணம் கொண்ட பொருள்கள் உள்ளதாகக் கூறி கூடுகளை எடுக் கின்றனர். அதனால் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முடி யாமல் அதன் சந்ததிகள் அழிகின் றன.
பிலிப்பைன்ஸ், நேபாளம், சீனா, இந்தோனேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வனவிலங்கு கள் அதிகளவில் வேட்டையாடப் படுகின்றன.
அந்நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஓரளவு குறைவு. இந்தியாவில் வேட்டை யாடப்படும் வன விலங்குகள் நேபாளம் வழியாக சீனாவுக்கு கடத்தப்படுகின்றன’’ என்றார்.
நன்றி; தி இந்து 2015மே 5ந் தேதியிட்ட நாளிதழ்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

அறிந்த தாவரங்களும் அறியாத மருத்துவக் குணங்களும்.

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.நம்ம ஊரிலுள்ள தாவரங்களின் மருத்துவக் குணங்களை அறிவோம்.அவற்றை தொகுத்து பாதுகாப்போம்.அறிந்த தாவரங்களின் அறியாத மருத்துவக்குணங்களை தெரிந்து கொள்வோம்.

(1)சோற்றுக்கற்றாழை
(2)கற்பூரவள்ளி அல்லது ஓமவள்ளி,
(3)துளசி,
(4)திருநீற்றுப்பத்திரி,
(5)சிறியா நங்கை அல்லது நிலவேம்பு,
(6)இரணகள்ளி,
(7)கள்ளி முளையான்,
(8)தூதுவேளை,
(9)நித்திய கல்யாணி அல்லது காசரளி,
(10)நரி மிரட்டி,
(11)பேய் மிரட்டி,
(12)தண்ணீர்விட்டான் கிழங்கு ,
(13)கண்டங்கத்திரி,
(14)கரு ஊமத்தை,
(15)நாயுருவி,
(16)ஓரிதழ் தாமரை,
(17)வெட்டிவேர்,
(18)கரிசிலாங்கண்ணி,
(19)நீலக்கொளுஞ்சி,
(20)சங்குப்பூ கொடி,
(21)பிரண்டை,
(22)சீந்தில் கொடி,
(23)கோவை கொடி,
(24)பூனைக்காலி அல்லது முசுமுசுத்தான் கொடி,
(25)வேலிப்பருத்தி கொடி,
(26)அருகம் புல்,
(27)வெற்றிலை கொடி,
(28)மிளகு கொடி,
(29)முடக்கத்தான் கொடி,
(30)சிறுகுறிஞ்சான் கொடி,
(31)ஆற்றுத்தும்மட்டி கொடி,
(32)ஆகாசக்கருடன் கொடி,
(33)கண்வலிக்கிழங்கு அல்லது செங்காந்தல் மலர் கொடி,
(34)கரு நொச்சி,
(35)மருதாணி மரம்,
(36)வாழை,
(37)நெல்லி மரம்,
(38)பப்பாளி,
(39)வேம்பு,
(40)கறிவேப்பிலை,
(41)வாதநாராயணன் மரம் (நாட்டு ரகம்)
(42)முருங்கை மரம்,
(43)எலுமிச்சை ,
(44)நாவல் மரம்,
(45)பூவரசு மரம்,
(46)பனை மரம்,
(47)நந்தியாவட்டை
(48)அரச மரம்,
(49)ஆல மரம்,
(50)கொய்யா மரம்,
(51)மாதுளை,
(52)வில்வ மரம்,
(53)கடுக்காய் மரம்,
(54)அத்தி மரம்,
(55) துத்தி செடி,
(56)தொட்டாற் சிணுங்கி,
(57)மணத்தக்காளி,
(58)சிறு பீளை,
(59)ஆடாதொடை,
(60)ஆவாரை,
(61)பொன்னாவாரை,
(62)காட்டாமணக்கு,
(63)சுண்டைக்காய் செடி,
(64)களாச்செடி,
(65)புங்கன் மரம்,
(66)அரளி,
(67)மணிப்பிளாண்ட்,
(68)கோரை,
(69)கீழா நெல்லி,
(70)குப்பை மேனி,
(71)அம்மான் பச்சரிசி,
(72)தும்பை,
(73)நெருஞ்சில்,
(74)நாகதாளி,
(75)பிரம்மந்தண்டு,
(76)ஆகாயத்தாமரை,
(77)ஊமத்தை,
(78)வெள்ளெருக்கு,
(79)கரும்பிரண்டை
இன்னும் கூடுதலாக அறிந்த நண்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறோம்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சித்தா,ஆயுர்வேதா,யுனானி,ஓமியோபதி,யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகள் விபரம்.

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். தமிழ்நாட்டில் உள்ள 
 (1)சித்த மருத்துவ கல்லூரிகள்,
(2)ஆயுர்வேதா கல்லூரிகள்,
(3)யுனானி கல்லூரிகள்,
(4)ஓமியோபதி கல்லூரிகள் ,
(5)யோகா &இயற்கை மருத்துவக் கல்லூரி பட்டியல் தங்களது பார்வைக்காக..

சித்தா மருத்துவக் கல்லூரிகள்
 அரசு சித்தா மருத்துவக் கல்லூரி சென்னை
 அரசு சித்தா மருத்துவக் கல்லூரி  திருநெல்வேலி-பாளையங்கோட்டை,
மேற்கண்ட இரண்டு கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன.

கோயம்புத்தூர், தருமபுரி, செங்கல்பட்டு, நாகர்கோயில், மதுரை, தேனி,  சேலம், சிவகிரி,தஞ்சாவூர்,திருவாரூர்,திருச்சி,திருவண்ணாமலை,    தூத்துக்குடி,
வேலூர்,விழுப்புரம் இவைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளன.

ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகள்
அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி கோட்டார் - கன்யாகுமரி
நாகர்கோயில்-கன்யாகுமரி,திருச்சி,தூத்துக்குடி இவைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுகின்றன. 

யுனானி மருத்துக் கல்லூரிகள்
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி சென்னை 
திருவாரூர்,வேலூர் இவைகள் இரண்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.

ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்
 அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மதுரை
நாகர்கோயில், சேலம் இவை இரண்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.

யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகள்
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை சென்னை

 இன்ஸ்டிடியூசன் உள்ள மருத்துவமனைகள் விவரம்

  சித்தா மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள்  அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் இயங்குகின்றன.

      அதேபோல ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி நிறுவனங்கள்
 திண்டுக்கல்,நாகப்பட்டினம்,கும்பகோணம்,திருப்பூர் மருத்துவமனைகளில் இயங்குகின்றன.

   அதேபோல யுனானி மருத்துவ கல்லூரி நிறுவனங்கள்  திண்டுக்கல்,நாகப்பட்டினம்,ராமநாதபுரம்  மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.

  அதேபோல ஓமியோபதி மருத்துவ கல்லூரி நிறுவனங்கள்
  கூடலூர்,பெண்ணாகரம்,திண்டுக்கல்,ஈரோடு ,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,பத்மநாபபுரம்,கரூர்,நாகப்பட்டினம்,நாமக்கல்,
பெரம்பலூர்,புதுக்கோட்டை,
ராமநாதபுரம்,பெரியகுளம்,கும்பகோணம்,நீலகிரி,தென்காசி,
திருப்பூர்,கோவில்பட்டி,விருதுநகர் ஆகிய  மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் செயல்படுகின்றன.



      அனைத்து தாலுக்கா மருத்துவமனைகளிலும்TK.HPL-TALUK HOSPITALS
 ,தாலூக்கா இல்லாத சில மருத்துவமனைகளிலும்NTK.HPL - NON TALUK HOPITALS,   
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்GPHC -GOVT.PRIMARY HEALTH CENTRES,செயல்படுகின்றன.







, பழங்குடி இனத்தவர் பகுதிகளிலும்TRIBAL DY. -TRIBAL DISPYS மற்றும்,
கிராமப்பகுதிகளிலும்GSRIDY - GOVT.SIDDHA RURAL DISPYS, மற்றும் GS.REGULAR DY - GOVT.SIDDHA REGULAR DISPYS மற்றும்
 NRHMPHC மற்றும்  
ஈஎஸ்ஐ மருத்துவமனைகளிலும்ESI DIPYS, மற்றும்
 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்COLLECTORATE DY, மற்றும் 
மதுரை மத்திய சிறைச்சாலையிலும்CETRE JAIL MADURAI 
சித்தா மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

அரசுப்பள்ளியில் மூலிகைக் கண்காட்சி-01



 2013நவம்பர் 13ந் தேதியிட்ட பதிவு இது.

மூலிகைக் கண்காட்சி

மெலட்டூர் அரசு பள்ளியின் அசத்தல் மூலிகைக் கண்காட்சி

                 இந்தப் பள்ளியில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அதில் தான் அசத்தல் நடந்தது. ஆம். ‘மூலிகைக் கண்காட்சி மற்றும் மூலிகைத் தயாரித்தல்’ என்ற பெயரில் ஓர் அறை.
                  அன்றாடம் நாம் பயன்படுத்தும் மூலிகைகள் உட்பட, அதிகம் தெரியாத மூலிகைகள் வரை கண்காட்சியில் வைக்கப்பட்டது. ஏலக்காய் முதல் யானை நெருஞ்சில் வரை என்று சொல்லலாம். 32 மூலிகைகள் கண்காட்சியில் இடம் பெற்றன. ஒவ்வொரு மூலிகைகளின் பெயர், உண்மையான தாவரம், அவற்றின் மருத்துக் குணம் என்று மாணவர்கள் எழுதியிருந்தார்கள்.
மாணவர்கள் மூலிகைகள் தயாரிக்க அந்த அறையில் தனியாக இடம் ஒதுக்கியிருந்தார்கள்.
              
           சிறுநீர்க்கற்களைக் கரைக்கும் யானைநெருஞ்சில் ஊறல் மற்றும் யானை நெருஞ்சில் கஷாயம், ரத்தம் சுத்திகரிக்கும் வில்வம் நீர் ஊறல், சிறுநீர் உபாதையைத் தீர்க்கும் சிறுகண்பீளைக் கஷாயம், சளிபோக்கும் தூதுவளை கஷாயம், குளிர்ச்சியைத் தரும் சோற்றுக்கற்றாழை பால் ஊறல், புண் ஆற்றும் சோற்றுக் கற்றாழை மஞ்சள் பற்று, மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லி ஊறல், சொறியையும் சிரங்கையும் போக்கும் குப்பைமேனிப் பற்று, தேமல், படை தீர்க்கும் சரக்கொன்றைப் பற்று மற்றும் துளசிப் பற்று, டெங்கு காய்ச்சல் தீர்க்கும் பப்பாளி இலைச் சாறு மற்றும் மலைவேம்பு கஷாயம், முடி வளர உதவும் சோற்றுக் கற்றாழை ஜெல் மற்றும் கற்றாழை எண்ணெய், வீக்கம் குறைக்கும் வெற்றிலை ஒத்து என்று பலவற்றை பார்வையாளர்களுக்குக் காட்டி அசத்தினார்கள் மெலட்டூர் அரசுப் பள்ளி மாணவர்கள்.
இதில் அனைவரையும் கவர்ந்தது யானை நெருஞ்சில் கஷாயம்தான். யானை நெருஞ்சில் செடியை வேரொடு பிடுங்கி, அதன் வேரை நல்ல நீரில் அலசி, வேருடன் 4 டம்ளர் நீரில் கொதிக்கவைத்தார்கள். கொதியில் நீரின் நிறம் பச்சையாகியாது. 4 தம்ளர் நீரை 1 டம்ளர் நீராகச் சுண்டக் காய்ச்ச, பச்சை நீர் பழுப்பு நீரானது. இந்த நீரினைக் காலைவேளையில், வெறும் வயிற்றில் தொடர்ந்து 10 நாள் சாப்பிட்டால் போதுமாம். சிறுநீர்ப்பையில் உள்ள கற்கள் எல்லாம் கரைந்து வெளியேறிவிடுமாம். தேவையில்லாமல் ஆப்ரேஷன் செய்து சிறுநீர்ப்பாதையைச் சிக்கலாக்கிக்கொள்ளவோ, 40, 50 ஆயிரம் செலவு செய்யவேண்டியதில்லை என்று ஆச்சரியம்படும்படி விளக்கினார்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான சிவாமணியும் ரத்னாஸ்ரீயும்.
அடுத்த முறை நடக்கும் கண்காட்சியில், யாருக்கும் தெரியவராத மூலிகைக்களைக் கண்காட்சியில் வைப்பதுடன், புதிய செய்முறைகளைச் செய்துகாட்ட விருப்பம் தெரிவித்தார்கள் மூலிகை மாணவர்கள்.
அறிவியல் கண்காட்சியில் மூலிகைக் கண்காட்சிக்கென்று தனியாக இடம் ஒதுக்க யோசனை சொன்ன அறிவியல் ஆசிரியர்கள் ஆர்.விஜயலெட்சுமி, எஸ்.சோனி, ஆர்.கே.கீதாவை, மூலிகைகளைத் திரட்டி, செய்முறைகளைச் செய்ய உதவிய தமிழாசிரியர் ரா.தாமோதரன், பங்கேற்ற மாணவர்கள், தலைமையாசிரியை என்.சசிகலா ராணி உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள்.

                   வருடம்தோறும் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்துவது வழக்கம். கிராமப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி என்பது தீபாவளி, பொங்கல்தான். அவ்வளவு ஆர்வமாகச் செயல்படுவார்கள் மாணவர்கள். தனியாகவோ, குழுவாகவோ இருந்து தமிழ், ஆங்கிலம் என்று எல்லாப் பாடத்திற்கும் மாதிரிகளை, செய்முறைகளைத் தயாரித்துக் காட்டி அசத்துபவர்கள் அவர்கள். பள்ளி, ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என்று அசத்தல் பயணம் தொடரும்.

                  பரிசுகளைக் கடந்து நாம் பார்க்கவேண்டியது ஒன்று இருக்கிறது. அசத்தும் கிராமத்து மாணவர்கள், பொருளாதார ரீதியில் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள். ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் செவ்வனே செய்து முடிப்பவர்கள்தான் இவர்கள்.

                 தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் அரசுப் பள்ளியில், இந்த வருடம் கணிப்பொறி 1/0-யில் இயங்குவது, கணிப்பொறி பாகங்களைக் கழட்டித் திரும்பவும் ஒன்று சேர்த்து இயக்கியது, உண்மையான நுரையீரல் சுருங்கி விரிவது, மின்விசிறியை ஓடவிட்டு காற்றாலையில் மின்சாரம் எடுப்பது, 100 அடி தூரத்திற்குக் கயிற்றில் ராக்கெட் விடுவது, கணித விளையாட்டு, பிஎம்ஐ கண்டுபிடிப்பது என்று விதவிதமாக அமர்க்களப்படுத்திவிட்டனர் மாணவர்கள். இவை எல்லாவற்றையும் விட சுவராஸ்யமான விஷயம் இந்தப் பள்ளியில் நடந்தது.


ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

கரட்டூர் இளைய சமூகம் Dr.APJ.அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

    
 

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை களங்கிட நின்றவர்
வாழ்க
  பூமியில் ஜனனத்தைப்போல் ஒரு  புதியது
இல்லை மரணத்தை
போல் ஒரு பழையது இல்லை
இரண்டும் இல்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உளாவிய கண்களும்
எங்கே
மகிழ்ந்து குழாவிய கைகளும்
எங்கே
தேசம் உளாவிய கால்களும்
எங்கே
தீயுண்டது என்றது சாம்பலும்
இங்கே
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை
வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொள்வோம்
நித்திரை கொள்வது நியதி
என்றாலும் யாத்திரை
என்றும் தொடர்கதையாகும்
கண்ணில் கண்டது காற்றுடன்
போக
மண்ணில் முளைத்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களாய் அந்த இன்னுயிர் வாழ்க
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க
பார்வைகள் அனைத்தும்
சூரியனில் சேர்க
போனவர் புண்ணியம்
நம்முடன் சேர்க
நீரில் மிதக்கும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம்
சேர்க.

வியாழன், 30 ஜூலை, 2015

ஆயில் புல்லிங் என்னும் எண்ணெயில் வாய் கொப்பளிப்பு

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம். வாயில்எண்ணெயால் கொப்பளித்தால் ஏற்படும் பயன்களை இப்போது அறிந்துகொள்வோம்.

வர்மக்கலை
ஆயில் புல்லிங் (Oil Pulling) / கவளம்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விட வேண்டும்.....
ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியாவா போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம் ..... கண் காது மூக்கு சம்பந்தமான மற்றும் நுரையீரல் நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.
நம் உடலில் ஏற்படக்கூடிய எய்ட்ஸ், சர்க்கரை, இரத்த அழுத்தம், இதயநோய்கள், பார்க்கின்சன், கல்லீரல், நோய், ரத்தபுற்று (அ) எலும்புமஜ்ஜை புற்றுநோயையும், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக எளிமையான முறையில் குணமாக்கியும் இருக்கிறார்கள் .....
தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை என்று மருத்துவர்களே கூறுகின்றனர் .....
நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம் குறையும்.....

மூலிகைகளினால் காய்ச்சப்பட்ட எண்ணெய்யைக் கொண்டு வாய்க்கொப்பளிப்பதற்கு "கவளம்"என்று பெயர். இந்தக் கவளம் நோயின் தன்மையைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்பட்டது.
ஸ்நேகன கவளம்: இது வாதத்தைத் தணிப்பது.
சமன கவளம் : பித்தத்தைத் தணிப்பது.
சோதன கவளம்: கபத்தைத் தணிப்பது.
ரோபண கவளம்: வாய்ப்புண் மாற்றுவது.
ஸ்னேகன கவளம் என்பது எண்ணெய்யைக் கொண்டோ, எள்ளை அரைத்துக் காய்ச்சியத் தண்ணீரைக் கொண்டோ வாய்க்கொப்பளிப்பது. வாத நோய்களுக்கும், குறிப்பாக பல் நோய்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும். அரிமேதாதி தைலத்தினால் செய்யப்படும் கவளம் பல் நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமன கவளம் என்பது கசப்பு, துவர்ப்பு, இனிப்பு,சுவைகள் சேர்ந்த மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயங்களைக் கொண்டும், குளிர்ச்சி தரக்கூடிய மூலிகைச் சாறைக்கொண்டும் வாய்க்கொப்பளிக்கும் முறை. தேன் கலந்த திரிபலா கஷாயம் இதற்கு எடுத்துக்காட்டு. மன நோய்களுக்கு இது சிறந்தத மருந்து.
சோதன கவளம் என்பது காரம், புளிப்பு போன்ற சுவைகளையுடைய கஷாயங்களால் செய்யப்படுகிறது. இதனால் சுவை அறியும் திறன் கூடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயன்படும். இஞ்சிக் கஷாயத்துடன் தேன் சேர்த்து சோதன கவளம் செய்யலாம்.
ரோபண கவளம் அதிமதுரக் கஷாயத்தால் செய்யப்படுவது. இது வாயில் வரக்கூடிய கேன்சரைக்கூட குணமாக்கும் என்ற மருத்துவச் செய்திகளைக் கண்டு நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
இந்த ஆயில்புல்லிங் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.
இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!
இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.
சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது.
ஒரு மனிதனுக்கு உமிழ் நீர் ஒழுங்காகச் சுரந்து, கட்டிப்படாமல் நீர்மத்தன்மையுடன் காணப்பட்டாலே ஆரோக்கியம் தானாக வந்துவிடும். "கோதடர்ந்த உமிழ்நீரை முறிய வைத்தால் கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே" என்பது அஹஸ்தியர் வாக்கு. .பாதி ஜீரணம் உமிழ் நீருடன் கலந்து, மென்று சாப்பிடுவதிலேயே முடிந்து விடுகிறது.உமீழ்நீர்ச்சுரப்பிகளை ,ஆயில்புல்லிங் நன்றாகச் சுரக்க வைக்கிறது.
ஈறு இறுகும் ஆயில்புல்லிங் :
, வெம்பிய கண்டங்கத்தரிப் பழத்தை பல இடங்களில் ஊசியால் நன்கு குத்தி நல்லெண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். இதனை பிழிந்து எண்ணெயை வடித்து, ஈறு கரைந்துள்ள இடங்களில் தடவ ஈறு இறுகும். பழத்தை இளஞ்சூட்டுடன் மென்று வாய் ஈறில் வைத்து அடக்கி வர ஈறு பலப்படும். வெம்பிய கண்டங் கத்தரிப்பழங்களை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யால் வாய் கொப்புளித்து வர (ஆயில் புல்லிங்) பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும்

திங்கள், 27 ஜூலை, 2015

சிறு தானியப்பயிர்கள்.

         மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். சிறு தானியப்பயிர்கள் பற்றி காண்போம்.               




                        சாமை

                                 தினை
                                    பனிவரகு
                                   வரகு

                                                     குதிரைவாலி





காய கற்பம் மூலிகைகள்

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். காய கற்பம் பற்றிய விபரம் தெரிந்துகொள்வோம்.
நோயின்றி வாழவும், உடலைப் பாதுகாக்கவும் சித்தர்கள் கூறிச் சென்ற நெறிமுறைகளுள் காய கற்பமும் ஒன்றாகும். காய கற்பம் என்பது நம் உடலை நோயின்றிக் காக்கவும், நோய் வராமல் தடுக்கவும், நரை, திரை, மூப்பு, சாக்காடு இன்றி பாதுகாக்கவும் பயன்படும் பொருளாகும்.
காய கற்பம் உண்ண விதிமுறைகள்:
- கற்பம் உண்ண காலை வேளை சிறந்தது
- அதிகப் பேச்சு, அதிகத் தூக்கம், அதிக நடை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- கற்பம் உண்ண ஆரம்பிக்கும் போது கற்ப மருந்தை மிகக் குறைந்த அளவு உண்ண வேண்டும். பின் சிறிது சிறிதாக அதிகரித்து குறிப்பிட்ட நாள் வரை உண்ட பின் சிறிது சிறிதாகக் குறைத்து நிறுத்த வேண்டும்.
- அபின், கஞ்சா, மாமிசம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- உப்பை வறுத்துப் பயன்படுத்த வேண்டும். புளிக்குப் பதிலாக நெல்லிக்காய், புளியாரை, புளியங்கொழுந்து போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
மூலிகைக் கற்பங்கள்

அறுகம் வேரினைப் பொடித்து மூவிரல் அளவு ஒரு மண்டலம் வரை உட்கொண்டு வர வெப்ப நோய்களும், முக்குற்றப் பிணிகளும் நீங்கும்.
இஞ்சி

இஞ்சியைச் சுத்தம் செய்து, கீற்றாக வெட்டி தேனில் நன்கு ஊறவைக்கவும். காய கற்ப முறைப்படி மனத்திடத்துடன் உண்டு வர நரை, திரை, மூப்புகள் இன்றி வாழலாம். கண்களின் பார்வையை அதிகப்படுத்தும். கபத்தால் தோன்றிய நோய்களைப் போக்கும். பெருவயிறு எனும் நோய்க்கு இஞ்சிச் சாறை நாள் ஒன்றுக்கு 40 மி.லிட்டராக உயர்த்தி, 240 மி.லிட்டர் வந்த உடன் நோய் நீங்கும் வரை 240 மி.லி கொடுத்து வர பெருவயிறு தீரும்.
- பத்திய உணவு
நெற்பொரி மாவுடன், பசுவின் நெய் கலந்து உணவிற்குப் பதிலாக உண்ணவேண்டும்.
அமுக்கரா :

அமுக்கிராக் கிழங்குப் பொடி, நெய் முதலியவற்றை உண்டு வர உறுதி, நீண்ட ஆயுள், அழகு முதலியவை உண்டாகும்.
ஆலம்விழுதுக் கற்பம் :
-ஆலம்விழுதுச் சாறுடன் கற்கண்டு கூட்டி 48 நாட்கள் கற்ப முறைப்படி உண்டு வர விந்து கட்டுப்படும். உடல் காயசித்தி அடையும்.
ஆலம் பாலினைத் தேவையான அளவு எடுத்துக்கொண்டு அத்துடன் அறுகம்புல் சூரணத்தைச் சேர்த்துக் குழைத்து மூவிரல் அளவு 48 நாட்கள் உண்டு வர வெண்குட்டம் தீரும். சரீர ஒளி உண்டாகும். இதே போன்று ஆல மரத்தின் வேர், பழம் இவற்றையும் கற்ப முறைப்படி உண்டு வந்தால் உடல் பலமாகும்.
விஷ்ணு கிரந்தி :
விஷ்ணு கிரந்தியைப் பாலில் அரைத்து 48 நாட்கள் உண்டு வர என்பு சுரம் தீரும். கண் ஒளி அதிகமாகும். உடலில் ஏற்படும் வலிகள் அனைத்தும் தீரும்.
தூதுவேளை:

தூதுவேளைக் கீரை, வேர், வற்றல், காய், ஊறுகாய் இவற்றை 40 நாட்கள் புசித்து வந்தால் கண்ணில் தோன்றும் தீக்குற்ற மிகுதி, மற்றக் கண்நோய்கள் அனைத்தும் தீரும்.
தூதுவேளைப் பூவுடன் முருங்கைப் பூவைச் சேர்த்து சூரணம் செய்து, பசும் பாலுடன் கலந்து உண்டு வர தாது விருத்தி உண்டாகும்
நன்னாரி::

நன்னாரியின் வேர், இலை, கொடி, காய், பூ இவைகளை நெய்விட்டு வதக்கி வறுத்துக் கொண்டு, புளி, உப்பு, மிளகு சேர்த்து துவையல், வடகம் போன்ற பொருட்களாக பாகம் செய்து 48 நாட்கள் உண்டு வர வெள்ளை, அக்குள் நாற்றம், வியர்வை நாற்றம் போன்றவை தீரும்.
எலுமிச்சை:

எலுமிச்சம் பழத்தை ரசமும் ஊறுகாயுமாகக் கற்ப முறையாய்ப் பத்தியத்துடன் ஆறு மாதம் உண்டு வர நரை, திரை, மூப்பு மாறும். பெருவயிறு, பக்க சூலை, முடம், வெறி, மயக்கம், மனச் சோர்வு போன்ற நோய்களும் அடியோடு நீங்கும்.
கடுக்காய்:
ஏழு வகையான கடுக்காய்கள் உள்ளன. ஒவ்வொரு கடுக்காயும் ஒவ்வொரு நோயைத் தீர்க்கவல்லது. எடுத்துக்காட்டாக,
விசயன் -வாத நோய்கள்
ரோகிணி -சீதம் அகலும், வயிற்றில் உள்ள புழு நீங்கும்
பிருதிவி -மலக்கட்டு
அமிர்தகி -சதை ரோகம்
சிவந்தி -மூலநோய்கள்
திருவிதை -தேகம் வலுப்பெறும்
அபயன் -மும்மலம் சுத்தம் அடையும்
கடுக்காய் மேல் தோலைச் சூரணம் செய்து தேனுடன் உண்டு வர உடல் உரமாகும். கடுக்காய்த் தோலைப் பொடித்துக் கொண்டு ஒரு நிலக்கடலை அளவு நீருடன் கற்ப முறைப்படி புசித்து வந்தால் காமாலை நோய் அணுகாது.
நெல்லிக்காய்:

மூப்படைந்தவரும், இளம் மாப்பிள்ளை போல் அழகுடன் இருக்க நெல்லிக்கனியைப் பாகஞ் செய்து உண்ணலாம்.
நெல்லி மரப்பட்டை, வேர், விதை, காய், கனி இவற்றைச் சூரணம் செய்தோ, குடிநீரிட்டோ கற்ப முறைப்படி உண்டு வர நோயின்றி வாழலாம்.
பலாப்பூ
பலா மரத்தின் பூக்களைக் கொண்டு வந்து நன்கு காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு, மூவிரல் கொள்ளும் அளவு தேனில் உண்டு வர நரைத்த மயிர் கருத்து விடும். உடல் வலுக்கும்.
வல்லாரை
வல்லாரையைக் காடியில் ஊறவைத்துச் சூரணம் செய்து உண்டு வந்தால் உடல் இளமையுடன் காணப்படும். நோய் வராது.

வேலிப்பருத்தி என்னும் உத்தாமணி கொடி

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். வேலிப்பருத்தி என்னும் உத்தாமணி மூலிகை பற்றி அறிந்துகொள்வோம்.
                      கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகைகளாகும். அத்தகைய மூலிகைகளில் வேலிப்பருத்தி என்ற உத்தாமணியும் ஒன்று.               உத்தாமணி அதிக மருத்துவக் குணம் கொண்டது. இது தென்னிந்தியா முழுமையும் காணப்படும். வேலி ஓரங்களில் கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர். இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

 வேலிப்பருத்தி முழு தாலாற் பற்றாது வேலிப்பரு
                                   என்கிறது சித்தர் பாடல்

           உத்தாமணி வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள், தோஷ விடங்கள் நீங்கும்.

ரத்த அழுத்தத்தைத் தணிக்க:
           வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 – 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண்டும் கிடைக்காவிட்டால், கொதிக்க வைத்த பால் அரை டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து 21 நாட்கள் அல்லது 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். இம்மருந்து எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும். இது பற்றி அகத்தியர் பரிபூரண நூலில் ஆரோக்கியத்திற்கு அற்புதமான மருந்து என்ற பகுதியில் கூறியுள்ளார். வர்ம பரிகார முறையில் இதுவே சிறந்த மருந்தாகும். மேலும் உடல் அசதியைப் போக்கும். நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்யும். நெஞ்சுலி குறையும்.

நோஞ்சான் குழந்தைகளுக்கு:
            சிறு குழந்தைகளுக்கு மார்பெலும்புக்கூடு முன்தள்ளி, நோஞ்சான் போல காணப்படுவார்கள். இவர்களுக்கு, வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் 1 ஸ்பூன், அருகம்புல் பொடி 1 ஸ்பூன் சேர்த்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வந்தால், நோஞ்சான் தன்மை மாறி, உடல் வலுப் பெறுவார்கள்.

வயிற்றுப்புழு நீங்க:
               குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவர்களின் வளர்ச்சி பாதிப்படைந்து நோஞ்சான் போல் காணப்படுவார்கள். இந்த வயிற்றுப் புழுக்களை நீக்க உத்தாமணியின் இலையை பறித்து நீர்விட்டு அலசி குடிநீராக செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும். ஒரு மண்டலம் கொடுத்தால் வயிற்றில் புழுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.

          உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.

           உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.

                உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.

                பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.

உத்தாமணி இலைச்சாறு – 5 மி.லி.
தூதுவளைச் சாறு – 5 மி.லி.
துளசிச் சாறு – 5 மி.லி.
கற்பூரவள்ளி இலைச்சாறு – 5 மி.லி.
வெற்றிலைச்சாறு – 5 மி.லி.
எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் சலதோஷம், மூக்கடைப்பு, இருமல், இரைப்பு நீரேற்றம் போன்றவை நீங்கும்.
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
வேலிப்பருத்திச் சாறு – 100 மி.லி.
கற்பூரவள்ளி இலைச்சாறு – 200 மி.லி
தேங்காய் எண்ணெய் – 300 மி.லி.
இவற்றை ஒன்றாகச்சேர்த்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு, அடிபட்ட இடங்கள், வீக்கங்கள் மீது தடவி வந்தால் எளிதில் குணமாகும். இந்த வைத்திய முறை பழங்காலந்தொட்டே வழக்கமாக இருந்து வருகிறது.

         சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

கற்பூள்ளிதாங்க ஓமவள்ளி


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். கற்பூரவள்ளி என்னும் ஓமவள்ளி மூலிகையின் பயன்களை அறிந்துகொள்வோம்.
கற்பூரவள்ளி
           ஒரு சிறந்த கிருமி நாசினியாகும்.
இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர்.  இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்த வகையான  பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.
கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி  என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளிஅமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில்  காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
கற்பூரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி  பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு ஒரு சிறு தேக்கரண்டி அளவு  தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின்  அபகாரம் குறையும்.

கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை,  தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு  பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி  வரவேண்டும்.
இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல்  ஏதுமின்றி பாதுகாக்கும்.

சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.
குழந்தைகளுக்கு உண்டான  மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும்.
 இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல்  திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும்  சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே  நீங்கும்.

கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு  கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும்.
மூச்சுக்குழல்  அடைப்பு சீராகும் .
 கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல்,  தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும். கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து  காப்பாற்றும்.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

மருந்தாகும் குடிநீர்....

மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம். இங்கு தண்ணீரும் மருந்தாகும் பற்றி அறிந்து கொள்வோம்.
 நமது உடம்புக்கு  கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறதோ  அப்போது நமக்கு தாகம் ஏற்படுகிறது .
 அது உண்மைதான்.
 ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு  அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது.
எல்லோருக்குமே நன்றாகத் தெரியும்.
நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று.


போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
 உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது.
 இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன.
தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும்.
உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.

மேற்பரப்பு நீர், சாதாரணமாகவே மென்மையாகவும், நிலத்தடி நீர், கடின நீராகவும் இருக்கும்.
இதன் அர்த்தம் என்னவென்றால், நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் நிரம்பவே அடங்கியுள்ளன.
கடின நீரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மென்னீர் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும்.
 அதேநேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்,
அதாவது, மென்னீர் தூய்மையற்றுப் போய்விடுமானால் அதுவே உடற் கோளாறுகளை உருவாக்கிவிடும்.
எனவே தான் குடிப்பதற்கும், மருத்துவத்திற்கும் தண்ணீரைப் பயன்படுத்தும் போது, அதனைச் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும்.
பல நூற்றாண்டு காலமாகவே, தண்ணீரை மருந்தாகவே பயன்படுதியுள்ளனர்.
தண்ணீர் தினமும் 10 கிளாஸ் குடித்து வந்தால் எடை அதிகமாக உள்ளவருக்கு 10 வாரத்தில் (இரண்டரை மாதம்) அவர் எடையில் 10 சதவீதம் குறைகிறது.  அதாவது 100 கிலோ எடை இருந்தால் 10 கிலோ எடை குறைந்து 90 கிலோ ஆகலாம்.

தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம். நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவ முறை 1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள். 2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது. 3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம். 4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours) 5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம். இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள் வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள் சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள் மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள் புற்றுநோய் – 180 நாட்கள் காச நோய் – 90 நாட்கள். ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். Copy and WIN : http://bit.ly/copynwin
Copy and WIN : http://bit.ly/copynwin
ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும்.
 எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அ ளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில் தண்ணீர் இழப்பு (dehydaration) ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம்.
அதிக அளவில் அருந்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.
உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உப பொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது. அதிக உடல் பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. அதே சமயம் குளிர் அதிகம் இருக்கும் போது சிறுநீராக அதிக அளவில் வெளியேறுகிறது. அதிக அளவில் வாந்தி எடுத்ததலும் வயிற்று போக்கு ஏற்பட்டாலும் தண்ணீர் வெளியேறுவதால் உடனே நிறைய நீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.
சோடியம் பொட்டாசியம் போன்ற சில மிக முக்கியமான தனிமங்கள் நீருடன் சேர்ந்து வெளியேறுவதால் இவை உடலின் அமில காரத்தன்மை மற்றும் நீரின் அளவை சரியாக வைத்திருக்க அதிக நீர் அருந்துவது அவசியமாகும். உடலும் இந்த மின்ணுக்களின் அளவை சரியாக்கி கொள்ள மிகவும் உழைக்கிறது. உதாரணமாக அதிக சோடியம் மின்னணு உடலில் சேர்ந்துவிட்டால், உடனே தாகம் எடுத்து நாம் நீர் அருந்தி அதை சரிப்படுத்துவோம். உடனே மூளை சிறுநீரகத்திற்கு ஒரு செய்தி அனுப்பி, சிறுநீர் வெளியேறுவது குறைந்து சோடியம் அளவு சரியாகிவிடும். சோடியம் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் அதிகமாக வெளியேறி இரத்ததில் நீரின் அளவைக் குறைந்து, சோடியம் அளவை சரிப்படுத்துகிறது. தாகம் எடுப்பது உடலின் நீர் அளவு குறைந்திருப்பதைக்காட்டுகிறது. அதேபோல பிட்யூட்டரி என்ற உறுப்பும், சிறுநீரகமும் தண்ணீர் மின்னணுக்கள் அளவை சரியாக அவைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
உடலில் தண்ணீர் அளவு குறையும் போது மூளை வாசோப்பெரெஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது சிறுநீரகங்கள் அதிக சிறுநீர் வெளியேற்றுவதை தடுக்கிறது. உடலில் தண்ணீர் குறையும் போது திசுக்களில் உள்ள தண்ணீர் செல் சவ்வுகளில் இருந்து வெளியேறி இரத்தத்தில் கலக்கிறது. தண்ணீர் அளவு அதிகமாகும் போது இரத்ததில் இருந்து திசுக்களுக்கு உள்ளே சென்று தண்ணீர் அளவை கட்டுப்படுத்துகிறது.

தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.
தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.
ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.

தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை ஏற்கனவே நிலவியது.
தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும். தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.
காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.
காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும். கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.
இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது.
உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும். தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது. ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும். பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை ஆகவே உடற் பயிற்சி செய்த பின் சரியான முறையில் தண்ணீர் குடிக்கும் வழிமுறை என்ன என்றால் முதலில் தண்ணீர் வாய்க்குள்ளே ஈரம் செய்ய வேண்டும். பின் குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.
=======================================================================
வயிற்றில் பூச்சி, வாய்வு பிரிதல் பிரச்சனை, வயிற்றுவலி, குடல் இறைச்சல், போன்ற பிரச்சனைகளுக்கு தீர ஒரு லிட்டர் தண்ணீரில் அரை  தேக்கரண்டி ஓமம் போட்டு சூடாக்கி வடிக்கட்டி குடித்தால் பிரச்சனைகள் தீரும். ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது  சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் உடல்சூடு போன்றவை தணியும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மிளகு, கொத்தமல்லியை ஆகியவற்றை தட்டிப்போட்டு போதுமான அளவு சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக  குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை, முகத்தில் ஏற்படும் கருவளையம், தொண்டைக்கட்டு ஆகியவை குணமாகும். ஒருலிட்டர் தண்ணீரில்  ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும். ஒருலிட்டர் தண்ணீரில்  10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வு பிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி  குணப்படும்.

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிக தாகம் அடங்கும். ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள  நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.

இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிச்சை உண்டு. ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது. ஒருலிட்டர் என்பது  ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும்  மிகவும் நல்லதுதான்.

ஒருமுறை தயாரித்த நீரை அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம். மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய்  குடிநீரையே பயண்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயண்படுத்தலாம்.