சனி, 22 ஆகஸ்ட், 2015

கவிழ்தும்பை மருத்துவத் தாவரம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கவிழ்தும்பை பற்றி காண்போம்.


                   குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன.
நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.
இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல் பாட்டை ஊக்குவிக்கின்றன.
கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும். கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.

பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை…

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். பேய் மிரட்டி மருத்துவத்தாவரத்தின் பயன்களை காண்போம்.



            சில குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது கழிச்சல் உண்டாகும். மேலும் குழந்தைகள் ஆறாம் மாதத்தில் தவழும் போதும், எட்டாம் மாதத்தில் எழுந்து நடக்கும் போதும் அருகில் கண்களில் படும் ஒற்றடை, தூசி, இறந்து போன பூச்சிகள், கொசுக்கள், ரோமங்கள் போன்றவற்றை துருதுருவென்ற தங்கள் கண்களால் கண்டுபிடித்து உட்கொண்டு விடுவது குழந்தைகளின் வழக்கம். இதனால் குழந்தைகளின் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, பேதி, சுரம் அதை தொடர்ந்து வலிப்பு, இருமல் உண்டாவதுடன் திடீர் திடீரென வீறிட்டு அழ ஆரம்பிக்கும். மேலும் தோல் வறட்சியடைந்து, சுருங்கி சவலைப் பிள்ளைப் போல் தேறாமல் காணப்படும்.
இதைக்கண்டு பயந்து போகும் பெற்றோர் பேய்,பூதம் என பலவாறாக கற்பனை செய்து கோயில்களிலும், பிற வழிபாட்டு தலங்களிலும் நேர்த்திகளை செய்கின்றனர். இன்னும் சிலரோ முதியோர்களையும், ஆன்மீகவாதிகளையும் அணுகி, குழந்தையின் பயத்தை போக்க, மந்திரிக்கும்படி கூறுகின்றனர். அவர்களும் கயிறு போன்ற சில பொருட்களை கொடுத்து குழந்தையின் மணிக்கட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் கால்களில் தாயத்து போல் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு கட்டும் பொருட்களில் பெரும்பாலும் மூலிகை வேர்களே அடங்கியுள்ளன.
இந்த மூலிகை வேர் நிறைந்த தாயத்துகளை குழந்தை வாயிலிட்டு சப்பும்போதும், மூக்கால் உறிஞ்சும்போதும் அவற்றின் மருத்துவ குணத்தால் குழந்தையின் உபாதைகள் நீங்குகின்றன.
குழந்தைகளுக்கு தோன்றும் இது போன்ற நோய்களை கட்டுப்படுத்தி, உடலை நன்னிலைப்படுத்தும் அற்புத மூலகை பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை. அனிசோமீல்ஸ் மலபாரிக்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும் பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் வேரில் பீட்டா சைட்டோஸ்டீரால், லுட்டுலினிக் அமிலம், ஓவாடியோலிட், அனிசோமிக் அமிலம், ஜெரானிக் அமிலம் ஆகியன உள்ளன. இவை செரிமானத்தை தூண்டி, குடலின் இயங்கு தன்மையை கட்டுப்படுத்துகின்றன.
பெருந்தும்பை இலைகள்-5 எடுத்து சிறு,சிறு துண்டுகளாக வெட்டி, 200 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 50 மி.லி.,யாக சுண்டியப்பின். வடிக் கட்டி காலை, மாலை குழந்தைகளுக்கு கொடுத்து வர பேதி, செரிமானமின்மை நீங்கி தெளிவுறும், 5 அல்லது 10 சொட்டுகள் இந்த இலைச்சாற்றை தேனுடன் குழப்பிக் கொடுக்க, பல் முளைக் கும் காலங்களில் தோன்றும் பிள்ளைக்கழிச்சல் நீங்கும். இதன் வேரை சுத்தம் செய்து உலர்த்தி, நூலில் சுற்றி மணிக்கட்டில் காப்பு போல் கட்டிவர குழந்தைகள் விரல் சப்பும் பொழுது இதன் மருத்துவச் சத்துக்கள் உள்ளிறங்கி, குழந்தைகளுக்கு வயிற்றில் தோன்றும் பலவித வயிற்று உபாதைகள், பயம் ஆகியவற்றை நீக்கி குழந்தையை தேறச் செய்யும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

சளித் தொல்லைக்கு மருந்து.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். சளித்தொல்லையா கவலைப்படாதீங்க..
                       வேலிப்பருத்தி என்னும்   உத்தாமணி இலைச்சாறு 5 மில்லி, தூதுவளைச் சாறு 5 மில்லி, துளசிச் சாறு 5 மில்லி கற்பூர வள்ளி இலைச்சாறு 5 மில்லி வெற்றிலைச்சாறு 5 மில்லி எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும். 
எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடியுங்க,சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச்சை சாற்றை காபியில் கலந்து குடியுங்க தலைவலி நீங்கும்.எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்கவைத்து குடியுங்க நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
கடல் அழிஞ்சில் பட்டை,திப்பிலி,தாளிசபத்திரி இம்மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இவற்றில் தினமும் இரண்டு கிராம் பொடியை இரண்டு வேளை வீதம் தேனில் குழைத்து சாப்பிடுங்க,சளி,தும்மல்,இருமல்,அலர்ஜி ஆகியவை காணாமல் போகும்.
 அரைக்கீரை தண்டுடன் மிளகு,மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில்  குடியுங்க சளி,இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.
ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடுங்க சளித்தொல்லை குணமாகும்.
ஆலமர விழுதை பொடி செய்து காலை மாலை இருவேளை சாப்பிடுங்க இருமல் குணமாகும்.
அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிடுங்க மார்புச்சளி குணமாகும்.
கடுகை பொடி செய்து தொண்டையில் பற்று போடுங்க தொண்டை வலி குணமாகும்.
வெள்ளைப்பூண்டு பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடுங்க சளித்தொல்லை நிங்கிவிடும்.
பூண்டு,சிறிது புளி,மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிடுங்க..சளித்தொல்லை குணமாகும்.
மிளகாய் வற்றல்,தேங்காய்த்துருவல் இரண்டையும் ஒருநாள் முழுவதும் வெயிலில் காயவைத்து பிறகு அவற்றுடன் தோலுரிக்காத பூண்டு,உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிடுங்க.சளித்தொல்லை நீங்கும்.

வியர்வை நாற்றமா?

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். வியர்வை நாற்றமா கவலையே வேண்டாம். எலுமிச்சை 
வியர்வை நாற்றத்தை நீக்கும் .அரைப்பழம் எலுமிச்சையை உடல் முழுவதும் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளியுங்க.குளிக்கும்போது சோப்பு போடாதீங்க,குளித்த பிறகு எவ்வித வாசனை திரவியங்களோ,பவுடரோ பயன்படுத்தாதீங்க. காலை முதல் மாலை வரை உடலில் வியர்வை நாற்றம் வருகிறதா? என சோதித்துப் பாருங்க..தினமும் எலுமிச்சை பழம் உடலுக்கும்,தலைக்கும் தேய்த்துக்குளியுங்க..முடிந்தவரை மாமிச உணவுகளையும்,மைதா மாவு சம்பந்தப்பட்ட உணவுவகைகளும் தவிருங்க..மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்க வியர்வை நாற்றமும் பெருமளவு குறையும்...

மூலிகைக் குடிநீர்-

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். மூலிகைக்குடிநீர் தயாரிக்கும் முறை மற்றும் மருத்துவப் பயன்கள் பற்றி காண்போம்.
சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும்.  அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.
                              மூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநீர்.

                     ஒரு பாத்திரத்தில் தேக்கரண்டி மூலிகை பொடியை நான்கு லிட்டர் சுத்தமான நீருடன் கலந்து கொதிக்க வைக்கவும்.
கொதி நிலையை அடைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு மூடியால் மூடி ஆற விடவும்.
தேவைப்பட்ட நேரத்தில் இளஞ்சூடாகப் பருகவும்.
இது போல பொடி கிடைக்காவிட்டால் நீங்களே கீழ்க்கண்டவற்றை தயாரிக்கலாம்: ஒரு தேக்கரண்டி:
சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்தால் சீராகக் குடிநீர் கிடைக்கும்.
சீரகம், தனியா விதைகள் சேர்த்துக் கொதிக்க வைத்தால் தனியா சீராகக் குடிநீர் கிடைக்கும்.
உலர்ந்த துளசி இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக் கொதிக்க வைத்தால் துளசி குடிநீர் கிடைக்கும்.
உலர்ந்த வல்லாரை இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக் கொதிக்க வைத்தால் வல்லாரை குடிநீர் கிடைக்கும்.
மாம்பட்டை, நெல்லிப்பட்டை, கரிஞ்ஞாலி வேர் இவற்றை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டால் மூலிகைக் குடிநீர் கிடைக்கும்


மூலிகைக் குடிநீரால் கிடைப்பதாகச் சொல்லப்படும் பலன்கள்:
                               ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இளஞ்சூடான சீரகக் குடிநீர் குடிப்பது இரத்த ஓட்டம் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரி செய்து வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சமன் படுத்தும் என்று சொல்கிறது.
இளஞ்சூடான சீரகக் குடிநீர் உடம்பிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
இதன் நோய் எதிர்ப்பு சக்தி காய்ச்சல், சளி, தும்மல் போன்ற உபாதைகளை அண்டவிடாமல் தடுக்கிறது.
தொண்டைக்கு இதமளிக்கிறது.
வயிற்றுப் பொருமல், உப்புசம், வாந்தி, பேதி, காலையில் தோன்றும் பித்தம், தலை சுற்றல் ஆகிய எல்லா துன்பங்களுக்கும் சிறந்த பானம்.
தூக்கமின்மை தீர்த்தல்
உடம்பின் செரிமான சக்தியை தூண்டும் விதமாக உடல் வெப்பத்தையும் சீராக்கும்.
இதில் உள்ள வைட்டமின் 'இ' உயிர் சத்தும், பிற இன்றியமையாத எண்ணெய் சத்துக்களும், நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சை காளான்களைக் கூட மட்டுப்படுத்துகிறது.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது பால் சுரப்பை சமன்படுத்தும்.


=============================================================

        இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.  இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.  பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது.  இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன.  இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.  உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள்  கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும்  தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர்,  கரிசாலை குடிநீர்,  நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர்,  சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.

ஆவாரம்பூ குடிநீர்

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

என்ற மருத்துவப் பழமொழி உண்டு.  ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.  இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.  மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில்  ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து  வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்


துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும்.  இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.  தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும்.  இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர்.  இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து  அனைவரும்  அருந்தலாம். 

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும்.  இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும்.  நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும்.  தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்

“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான  இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது.  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.  இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்

சீர்+அகம் =சீரகம்.  அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.

 ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

கண் சூடு குறைக்கும்.  வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

சரும நோய்கள் வராமல் தடுக்கும்.  இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்

மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும்.  அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்

நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  உடல் சூட்டைத் தணிக்கும்.  குடல்புண்களை ஆற்றும்.  மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் குடிநீர்

ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

அதிர்ச்சியூட்டும் தகவல் தங்களது சிந்தனைக்காக...

  அழியும் நிலையில் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள்....
மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். வனவிலங்குகள் மற்றும் மருத்துவ மூலிகைகள் பற்றி அறிவோம்.அவற்றை பாதுகாப்போம் என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பினை துவக்கியுள்ளோம்.
                உலகில் 56,441 வனவிலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா. சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பானது (ஐ.யூ.சி.என்.) அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங் களைக் கண்டறிந்து உலகுக்கு அறிவிக்கும். அந்த வகையில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற இந்த அமைப்பின் ஆய்வில், உலகில் 56,441 வனவிலங்குகள், 19,738 தாவரங்கள் என 76,179 உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
அழிந்துவரும் விலங்குகள்
இதுகுறித்து திண்டுக்கல் வன உயிரினங்கள் ஆர்வலர் டாக்டர் ராம சுப்பு `தி இந்து’விடம் கூறியதாவது: ‘‘உலகளவில் இந்தியாவில் 4,850 வன விலங்குகள், 2,119 தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. போடிநாயக்கனூர் மலையில் நடமாடும் ராவோ செஸ்டஸ் டிராவன் கோரிக்கஸ் என்ற ஒரு வகை தவளை யினம் முற்றிலும் அழிந்துவிட்டது. மெட்ராஸ் ஸ்பாட்டட் அரணை, நம்தபா பறக்கும் அணில், புதுச்சேரி சுறா, சும்த்ரன் காண்டாமிருகம், காரியல் வகை முதலை, கங்கை சுறா, இந்திய கழுகு, ராமேசுவரம் பாராசூட் சிலந்தி, குள்ளப்பன்றி, இந்தியன் பஸ்டர்டு உள்ளிட்டவை மிகவும் மோசமான நிலையில் அழிந்துவருகின்றன.
கொடி நாகம், இந்திய நீர் எருமை, குரைக்கும் மான், பச்சை ஆமை, ஆசியா யானை, ஆசியா காட்டுநாய், களக்காடு பாறை கெண்டை மீன், இந்திய எறும்புத் திண்ணி, சிறுத்தை, நீலகிரி பைபட், ஆசியா சிங்கம், புலி மற்றும் பனிச்சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அழியும்தருவாயில் உள்ளன.
சர்வதேச சந்தையில் வனவிலங் குகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தை மதிப்பு, அவற்றில் இருந்து தயாரிக் கப்படும் மருந்து பொருட்களுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள வர வேற்பு போன்றவை வனவிலங் களின் அழிவுக்கு முக்கிய காரணம். மேலும், காடுகளை அழித்து விளை நிலங்கள், சுற்றுலாத் தலங்கள் அமைப்பது, காட்டுத் தீ, அந்நிய களைச் செடிகள் அதிகரிப்பு, சட்டவிரோதமாக வேட்டையாடுதல் போன்றவற்றால் காடுகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
காடுகளில் மனித நடமாட்டம் அதிகரிப்பதால் வனவிலங்குகளின் இனப்பெருக்கத் திறன் குறைகிறது. 75 சதவீத வனவிலங்குகள் தாவரங் களைச் சார்ந்துள்ளன. ஒரு தாவ ரம் அழிந்தால் அவற்றை சார்ந் திருக்கும் வனவிலங்குகளும் அழிகின்றன.
குறிப்பாக சிங்கவால் குரங்கு `குள்ளிநியா’ என்ற ஒரு வகை மரத்தைச் சார்ந்துள்ளது. தற்போது இந்த மரங்கள் அழிவதால் சிங்க வால் குரங்குகளும் அழிந்து வருகின் றன.
பறவைகள், விலங்குகளை அலங்காரத்துக்காக பிடித்து வைத்து கூண்டுகளில் வைப்பதா லும் அவை அழிகின்றன.
உலகிலேயே சீனாவில் வன விலங்குகளின் உடல் உறுப்புகளில் இருந்து அதிகளவு இயற்கை மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவர்களுடைய இயற்கை மருத்து வமானது முழுக்க முழுக்க வனவிலங்குகளைச் சார்ந்துள்ளது. புலியின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண் களின் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதாக அவர்கள் நம்புகின் றனர். பாம்புகளை பாட்டிலில் அடைத்து அதில் ஒயினை ஊற்றி பாம்பு ஒயின் தயாரிக்கின்றனர்.
இதேபோல், காட்டெருமை, காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைமுடி, தந்தம், கரடியின் கணைய நீர், தேவாங்கு தோல், நரியின் தலைப்பகுதி எலும்பு போன்றவற்றில் இருந்து சீனாவில் மருந்துகள் தயாரிக்கப்படு கின்றன.
பறவைகள் தங்களுடைய எச்சத் தின் மூலம் கூடுகளை கட்டுகின்றன. அந்த கூடுகளில் அதிக மருத்துவ குணம் கொண்ட பொருள்கள் உள்ளதாகக் கூறி கூடுகளை எடுக் கின்றனர். அதனால் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முடி யாமல் அதன் சந்ததிகள் அழிகின் றன.
பிலிப்பைன்ஸ், நேபாளம், சீனா, இந்தோனேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வனவிலங்கு கள் அதிகளவில் வேட்டையாடப் படுகின்றன.
அந்நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஓரளவு குறைவு. இந்தியாவில் வேட்டை யாடப்படும் வன விலங்குகள் நேபாளம் வழியாக சீனாவுக்கு கடத்தப்படுகின்றன’’ என்றார்.
நன்றி; தி இந்து 2015மே 5ந் தேதியிட்ட நாளிதழ்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

அறிந்த தாவரங்களும் அறியாத மருத்துவக் குணங்களும்.

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.நம்ம ஊரிலுள்ள தாவரங்களின் மருத்துவக் குணங்களை அறிவோம்.அவற்றை தொகுத்து பாதுகாப்போம்.அறிந்த தாவரங்களின் அறியாத மருத்துவக்குணங்களை தெரிந்து கொள்வோம்.

(1)சோற்றுக்கற்றாழை
(2)கற்பூரவள்ளி அல்லது ஓமவள்ளி,
(3)துளசி,
(4)திருநீற்றுப்பத்திரி,
(5)சிறியா நங்கை அல்லது நிலவேம்பு,
(6)இரணகள்ளி,
(7)கள்ளி முளையான்,
(8)தூதுவேளை,
(9)நித்திய கல்யாணி அல்லது காசரளி,
(10)நரி மிரட்டி,
(11)பேய் மிரட்டி,
(12)தண்ணீர்விட்டான் கிழங்கு ,
(13)கண்டங்கத்திரி,
(14)கரு ஊமத்தை,
(15)நாயுருவி,
(16)ஓரிதழ் தாமரை,
(17)வெட்டிவேர்,
(18)கரிசிலாங்கண்ணி,
(19)நீலக்கொளுஞ்சி,
(20)சங்குப்பூ கொடி,
(21)பிரண்டை,
(22)சீந்தில் கொடி,
(23)கோவை கொடி,
(24)பூனைக்காலி அல்லது முசுமுசுத்தான் கொடி,
(25)வேலிப்பருத்தி கொடி,
(26)அருகம் புல்,
(27)வெற்றிலை கொடி,
(28)மிளகு கொடி,
(29)முடக்கத்தான் கொடி,
(30)சிறுகுறிஞ்சான் கொடி,
(31)ஆற்றுத்தும்மட்டி கொடி,
(32)ஆகாசக்கருடன் கொடி,
(33)கண்வலிக்கிழங்கு அல்லது செங்காந்தல் மலர் கொடி,
(34)கரு நொச்சி,
(35)மருதாணி மரம்,
(36)வாழை,
(37)நெல்லி மரம்,
(38)பப்பாளி,
(39)வேம்பு,
(40)கறிவேப்பிலை,
(41)வாதநாராயணன் மரம் (நாட்டு ரகம்)
(42)முருங்கை மரம்,
(43)எலுமிச்சை ,
(44)நாவல் மரம்,
(45)பூவரசு மரம்,
(46)பனை மரம்,
(47)நந்தியாவட்டை
(48)அரச மரம்,
(49)ஆல மரம்,
(50)கொய்யா மரம்,
(51)மாதுளை,
(52)வில்வ மரம்,
(53)கடுக்காய் மரம்,
(54)அத்தி மரம்,
(55) துத்தி செடி,
(56)தொட்டாற் சிணுங்கி,
(57)மணத்தக்காளி,
(58)சிறு பீளை,
(59)ஆடாதொடை,
(60)ஆவாரை,
(61)பொன்னாவாரை,
(62)காட்டாமணக்கு,
(63)சுண்டைக்காய் செடி,
(64)களாச்செடி,
(65)புங்கன் மரம்,
(66)அரளி,
(67)மணிப்பிளாண்ட்,
(68)கோரை,
(69)கீழா நெல்லி,
(70)குப்பை மேனி,
(71)அம்மான் பச்சரிசி,
(72)தும்பை,
(73)நெருஞ்சில்,
(74)நாகதாளி,
(75)பிரம்மந்தண்டு,
(76)ஆகாயத்தாமரை,
(77)ஊமத்தை,
(78)வெள்ளெருக்கு,
(79)கரும்பிரண்டை
இன்னும் கூடுதலாக அறிந்த நண்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறோம்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சித்தா,ஆயுர்வேதா,யுனானி,ஓமியோபதி,யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகள் விபரம்.

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். தமிழ்நாட்டில் உள்ள 
 (1)சித்த மருத்துவ கல்லூரிகள்,
(2)ஆயுர்வேதா கல்லூரிகள்,
(3)யுனானி கல்லூரிகள்,
(4)ஓமியோபதி கல்லூரிகள் ,
(5)யோகா &இயற்கை மருத்துவக் கல்லூரி பட்டியல் தங்களது பார்வைக்காக..

சித்தா மருத்துவக் கல்லூரிகள்
 அரசு சித்தா மருத்துவக் கல்லூரி சென்னை
 அரசு சித்தா மருத்துவக் கல்லூரி  திருநெல்வேலி-பாளையங்கோட்டை,
மேற்கண்ட இரண்டு கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன.

கோயம்புத்தூர், தருமபுரி, செங்கல்பட்டு, நாகர்கோயில், மதுரை, தேனி,  சேலம், சிவகிரி,தஞ்சாவூர்,திருவாரூர்,திருச்சி,திருவண்ணாமலை,    தூத்துக்குடி,
வேலூர்,விழுப்புரம் இவைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளன.

ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகள்
அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி கோட்டார் - கன்யாகுமரி
நாகர்கோயில்-கன்யாகுமரி,திருச்சி,தூத்துக்குடி இவைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுகின்றன. 

யுனானி மருத்துக் கல்லூரிகள்
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி சென்னை 
திருவாரூர்,வேலூர் இவைகள் இரண்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.

ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்
 அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மதுரை
நாகர்கோயில், சேலம் இவை இரண்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.

யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகள்
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை சென்னை

 இன்ஸ்டிடியூசன் உள்ள மருத்துவமனைகள் விவரம்

  சித்தா மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள்  அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் இயங்குகின்றன.

      அதேபோல ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி நிறுவனங்கள்
 திண்டுக்கல்,நாகப்பட்டினம்,கும்பகோணம்,திருப்பூர் மருத்துவமனைகளில் இயங்குகின்றன.

   அதேபோல யுனானி மருத்துவ கல்லூரி நிறுவனங்கள்  திண்டுக்கல்,நாகப்பட்டினம்,ராமநாதபுரம்  மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.

  அதேபோல ஓமியோபதி மருத்துவ கல்லூரி நிறுவனங்கள்
  கூடலூர்,பெண்ணாகரம்,திண்டுக்கல்,ஈரோடு ,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,பத்மநாபபுரம்,கரூர்,நாகப்பட்டினம்,நாமக்கல்,
பெரம்பலூர்,புதுக்கோட்டை,
ராமநாதபுரம்,பெரியகுளம்,கும்பகோணம்,நீலகிரி,தென்காசி,
திருப்பூர்,கோவில்பட்டி,விருதுநகர் ஆகிய  மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் செயல்படுகின்றன.



      அனைத்து தாலுக்கா மருத்துவமனைகளிலும்TK.HPL-TALUK HOSPITALS
 ,தாலூக்கா இல்லாத சில மருத்துவமனைகளிலும்NTK.HPL - NON TALUK HOPITALS,   
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்GPHC -GOVT.PRIMARY HEALTH CENTRES,செயல்படுகின்றன.







, பழங்குடி இனத்தவர் பகுதிகளிலும்TRIBAL DY. -TRIBAL DISPYS மற்றும்,
கிராமப்பகுதிகளிலும்GSRIDY - GOVT.SIDDHA RURAL DISPYS, மற்றும் GS.REGULAR DY - GOVT.SIDDHA REGULAR DISPYS மற்றும்
 NRHMPHC மற்றும்  
ஈஎஸ்ஐ மருத்துவமனைகளிலும்ESI DIPYS, மற்றும்
 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்COLLECTORATE DY, மற்றும் 
மதுரை மத்திய சிறைச்சாலையிலும்CETRE JAIL MADURAI 
சித்தா மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

அரசுப்பள்ளியில் மூலிகைக் கண்காட்சி-01



 2013நவம்பர் 13ந் தேதியிட்ட பதிவு இது.

மூலிகைக் கண்காட்சி

மெலட்டூர் அரசு பள்ளியின் அசத்தல் மூலிகைக் கண்காட்சி

                 இந்தப் பள்ளியில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அதில் தான் அசத்தல் நடந்தது. ஆம். ‘மூலிகைக் கண்காட்சி மற்றும் மூலிகைத் தயாரித்தல்’ என்ற பெயரில் ஓர் அறை.
                  அன்றாடம் நாம் பயன்படுத்தும் மூலிகைகள் உட்பட, அதிகம் தெரியாத மூலிகைகள் வரை கண்காட்சியில் வைக்கப்பட்டது. ஏலக்காய் முதல் யானை நெருஞ்சில் வரை என்று சொல்லலாம். 32 மூலிகைகள் கண்காட்சியில் இடம் பெற்றன. ஒவ்வொரு மூலிகைகளின் பெயர், உண்மையான தாவரம், அவற்றின் மருத்துக் குணம் என்று மாணவர்கள் எழுதியிருந்தார்கள்.
மாணவர்கள் மூலிகைகள் தயாரிக்க அந்த அறையில் தனியாக இடம் ஒதுக்கியிருந்தார்கள்.
              
           சிறுநீர்க்கற்களைக் கரைக்கும் யானைநெருஞ்சில் ஊறல் மற்றும் யானை நெருஞ்சில் கஷாயம், ரத்தம் சுத்திகரிக்கும் வில்வம் நீர் ஊறல், சிறுநீர் உபாதையைத் தீர்க்கும் சிறுகண்பீளைக் கஷாயம், சளிபோக்கும் தூதுவளை கஷாயம், குளிர்ச்சியைத் தரும் சோற்றுக்கற்றாழை பால் ஊறல், புண் ஆற்றும் சோற்றுக் கற்றாழை மஞ்சள் பற்று, மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லி ஊறல், சொறியையும் சிரங்கையும் போக்கும் குப்பைமேனிப் பற்று, தேமல், படை தீர்க்கும் சரக்கொன்றைப் பற்று மற்றும் துளசிப் பற்று, டெங்கு காய்ச்சல் தீர்க்கும் பப்பாளி இலைச் சாறு மற்றும் மலைவேம்பு கஷாயம், முடி வளர உதவும் சோற்றுக் கற்றாழை ஜெல் மற்றும் கற்றாழை எண்ணெய், வீக்கம் குறைக்கும் வெற்றிலை ஒத்து என்று பலவற்றை பார்வையாளர்களுக்குக் காட்டி அசத்தினார்கள் மெலட்டூர் அரசுப் பள்ளி மாணவர்கள்.
இதில் அனைவரையும் கவர்ந்தது யானை நெருஞ்சில் கஷாயம்தான். யானை நெருஞ்சில் செடியை வேரொடு பிடுங்கி, அதன் வேரை நல்ல நீரில் அலசி, வேருடன் 4 டம்ளர் நீரில் கொதிக்கவைத்தார்கள். கொதியில் நீரின் நிறம் பச்சையாகியாது. 4 தம்ளர் நீரை 1 டம்ளர் நீராகச் சுண்டக் காய்ச்ச, பச்சை நீர் பழுப்பு நீரானது. இந்த நீரினைக் காலைவேளையில், வெறும் வயிற்றில் தொடர்ந்து 10 நாள் சாப்பிட்டால் போதுமாம். சிறுநீர்ப்பையில் உள்ள கற்கள் எல்லாம் கரைந்து வெளியேறிவிடுமாம். தேவையில்லாமல் ஆப்ரேஷன் செய்து சிறுநீர்ப்பாதையைச் சிக்கலாக்கிக்கொள்ளவோ, 40, 50 ஆயிரம் செலவு செய்யவேண்டியதில்லை என்று ஆச்சரியம்படும்படி விளக்கினார்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான சிவாமணியும் ரத்னாஸ்ரீயும்.
அடுத்த முறை நடக்கும் கண்காட்சியில், யாருக்கும் தெரியவராத மூலிகைக்களைக் கண்காட்சியில் வைப்பதுடன், புதிய செய்முறைகளைச் செய்துகாட்ட விருப்பம் தெரிவித்தார்கள் மூலிகை மாணவர்கள்.
அறிவியல் கண்காட்சியில் மூலிகைக் கண்காட்சிக்கென்று தனியாக இடம் ஒதுக்க யோசனை சொன்ன அறிவியல் ஆசிரியர்கள் ஆர்.விஜயலெட்சுமி, எஸ்.சோனி, ஆர்.கே.கீதாவை, மூலிகைகளைத் திரட்டி, செய்முறைகளைச் செய்ய உதவிய தமிழாசிரியர் ரா.தாமோதரன், பங்கேற்ற மாணவர்கள், தலைமையாசிரியை என்.சசிகலா ராணி உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள்.

                   வருடம்தோறும் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்துவது வழக்கம். கிராமப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி என்பது தீபாவளி, பொங்கல்தான். அவ்வளவு ஆர்வமாகச் செயல்படுவார்கள் மாணவர்கள். தனியாகவோ, குழுவாகவோ இருந்து தமிழ், ஆங்கிலம் என்று எல்லாப் பாடத்திற்கும் மாதிரிகளை, செய்முறைகளைத் தயாரித்துக் காட்டி அசத்துபவர்கள் அவர்கள். பள்ளி, ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என்று அசத்தல் பயணம் தொடரும்.

                  பரிசுகளைக் கடந்து நாம் பார்க்கவேண்டியது ஒன்று இருக்கிறது. அசத்தும் கிராமத்து மாணவர்கள், பொருளாதார ரீதியில் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள். ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் செவ்வனே செய்து முடிப்பவர்கள்தான் இவர்கள்.

                 தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் அரசுப் பள்ளியில், இந்த வருடம் கணிப்பொறி 1/0-யில் இயங்குவது, கணிப்பொறி பாகங்களைக் கழட்டித் திரும்பவும் ஒன்று சேர்த்து இயக்கியது, உண்மையான நுரையீரல் சுருங்கி விரிவது, மின்விசிறியை ஓடவிட்டு காற்றாலையில் மின்சாரம் எடுப்பது, 100 அடி தூரத்திற்குக் கயிற்றில் ராக்கெட் விடுவது, கணித விளையாட்டு, பிஎம்ஐ கண்டுபிடிப்பது என்று விதவிதமாக அமர்க்களப்படுத்திவிட்டனர் மாணவர்கள். இவை எல்லாவற்றையும் விட சுவராஸ்யமான விஷயம் இந்தப் பள்ளியில் நடந்தது.


ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

கரட்டூர் இளைய சமூகம் Dr.APJ.அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

    
 

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை களங்கிட நின்றவர்
வாழ்க
  பூமியில் ஜனனத்தைப்போல் ஒரு  புதியது
இல்லை மரணத்தை
போல் ஒரு பழையது இல்லை
இரண்டும் இல்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உளாவிய கண்களும்
எங்கே
மகிழ்ந்து குழாவிய கைகளும்
எங்கே
தேசம் உளாவிய கால்களும்
எங்கே
தீயுண்டது என்றது சாம்பலும்
இங்கே
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை
வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொள்வோம்
நித்திரை கொள்வது நியதி
என்றாலும் யாத்திரை
என்றும் தொடர்கதையாகும்
கண்ணில் கண்டது காற்றுடன்
போக
மண்ணில் முளைத்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களாய் அந்த இன்னுயிர் வாழ்க
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க
பார்வைகள் அனைத்தும்
சூரியனில் சேர்க
போனவர் புண்ணியம்
நம்முடன் சேர்க
நீரில் மிதக்கும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம்
சேர்க.