சனி, 9 ஏப்ரல், 2016

போக்குவரத்துக் குற்றங்களில் முக்கியமானவை...01

சைகைகளும்,போக்குவரத்து சின்னங்களும் சாலையின் மொழியாகும்.
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.முதலில் போக்குவரத்துக் குற்றங்கள் என கருதப்படுபவை பற்றி தெரிந்துகொள்வோம்.
(1)ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அல்லது உரிமம் செல்லத்தக்க நிலையில் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது குற்றமாகும்.தண்டனை மூன்று மாதங்கள் சிறை மற்றும் ஐநூறு ரூபாய் அபராதம் ஆகும்.

(2)சிறுவர்கள் உரிய வயது பூர்த்தியாகும் முன்னரே பொதுச்சாலையில் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். தண்டனையாக மூன்று மாதங்கள் சிறை மற்றும் ஐநூறு ரூபாய் அபராதம் ஆகும்.

(3)வாகனத்தின் உரிமையாளரோ,வாகனத்தின் பொறுப்பாளரோ அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு உரிய உரிமம் இல்லாத ஒருவரை ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும்.அல்லது பெற்றோர்களோ நண்பர்களோ பாதுகாவலர்களோ இளவயது சிறுவர்களை வாகனத்தை ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும்.மேற்கண்ட குற்றங்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய அபராதமும் செலுத்த வேண்டும்.

(4)ஒருவருடைய ஓட்டுநர் உரிமத்தை அல்லது பழகுநர் உரிமத்தை வேறு ஒருவர் பயன்படுத்த அனுமதிப்பது குற்றமாகும்.முதல் தடவை நூறு ரூபாய் அபராதம் ஆகும்.அதுவே இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகளுக்கு அனுமதித்தால் முந்நூறு ரூபாய் அபராதமாகும்.

(5)தகுதி இழக்கப்பட்ட ஒருவர் வாகனத்தை ஓட்டுவது குற்றமாகும்.ஓட்டுநர் உரிமம் வேண்டி விண்ணப்பம் செய்துள்ளவர் வாகனம் ஓட்டுவது குற்றமாகும்.ஏற்கனவே வைத்துள்ள ஓட்டுநர் உரிமத்தில் எழுதப்பட்டுள்ள மேற்குறிப்புகளை அழித்துவிட்டு ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்துளவர் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். தண்டனை மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்நூறு ரூபாய் அபராதம் ஆகும்.

(6)அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி ஓட்டுவதும் அல்லது மிக மெதுவாக ஓட்டுவதும் குற்றமாகும்.முதல் தடவை குற்றத்திற்கு நானூறு ரூபாய் அபராதம்.அதுவே இரண்டுக்கும் மேற்பட்ட தடவை குற்றமானால் ஆயிரம் ரூபாய் அபராதம் ஆகும்.

(7)அனுமதி வேகத்திற்கும் அதிக வேகத்தில் ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும்.தண்டனை முதல் தடவை என்றால் முந்நூறு ரூபாய் அபராதம் அதுவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடவை என்றால் ஐந்நூறு ரூபாய் அபராதம் ஆகும்.

(8)அனுமதிக்கப்பட்ட எடையளவுக்கு அதிகமாக ஏற்றி வாகனத்தை ஓட்டினால் ஓட்டுவதற்கு அனுமதியளித்தாலோ குற்றமாகும்.தண்டனை குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் ஆகும் கூடுதலாக ஏற்றப்பட்டுள்ள ஒவ்வொரு டன் எடைக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் இறக்கு கூலி அபராதம் ஆகும்.

(9)அபாயகரமாக வாகனத்தை ஓட்டுவதும் குற்றம் ஓட்ட அனுமதியளிப்பதும் குற்றம் ஆகும். தண்டனை முதல் தடவை ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறைத்தண்டனை ஆகும்.அதுவே இரண்டாவது தடவை அல்லது தற்கு மேல் குற்றம் புரிந்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டும் ஆகும்.

(10)குடிபோதையில் அல்லது போதை மருந்து உட்கொண்டு வாகனத்தை ஓட்டினாலோ அல்லது ஓட்டுவதற்கு அனுமதியளித்தாலோ குற்றமாகும்.தண்டனை முதல் தடவை குற்றத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் ஆகும். இதே குற்றத்தை இரண்டாவது தடவை  மற்றும் அதற்கு மேலும் செய்தால் மூவாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டாண்டுகள் சிறை அல்லது இவை இரண்டும் ஆகும்.

(11) மனநிலை சரியில்லாமல் அல்லது உடல் நிலை சரியில்லாமல் வாகனத்தை ஓட்டினால் அல்லது வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதியளித்தால் குற்றமாகும்.முதல் தடவை இருநூறு ரூபாய் அபராதம் ஆகும்.அதுவே இரண்டாவது தடவை மற்றும் அதற்கும் அதிகமான தடவை எனில் ஐந்நூறு ரூபாய் அபராதம் ஆகும்.

(12) காப்பீடு செய்யாமல் வாகனத்தை ஓட்டினால் மூன்று மாதங்கள் வரையில் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டும் ஆகும்.

         இன்னும்  தொடரும் ....................... 
என அன்பன், 
C.பரமேஸ்வரன், 9585600733
 அரசுப் பேருந்து ஓட்டுநர்,
தாளவாடி கிளை,
ஈரோடு மாவட்டம்.

    

வியாழன், 7 ஏப்ரல், 2016

சாலையின் குரல் -01

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.நாட்டின் முதுகெலும்பாகத்திகழும் சாலைப் போக்குவரத்தில் விபத்துக்குக்கான காரணங்களும்,விபத்தின் விளைவுகளும், பற்றி இந்த வலைப்பக்கத்தில் பதிவிட்டு சாலைப் பாதுகாப்புக்கான காரணங்களை பகிர்வோம். 
அன்பன்,
பரமேஸ்வரன், 9585600733
அரசுப்பேருந்து ஓட்டுநர்,
தாளவாடி கிளை,
ஈரோடு மண்டலம்-

திங்கள், 2 நவம்பர், 2015

சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு?

 

மரியாதைக்குரியவர்களே,

வணக்கம். சித்த மருத்துவ உண்மை பற்றி தெரிந்துகொள்வோம்.

தேவையற்ற பதற்றமும் அறிய வேண்டிய உண்மைகளும்

புதிதாக யாரிடமாவது சித்த மருத்துவம் பற்றியோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குச் சித்தத்தில் நல்ல மருந்து இருக்கிறது என்றோ சொன்னால், உடனடியாக அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? படித்தவர் முதல் பாமரர்வரை உடனடியாக வேதியியல் பேராசிரியர்போல மாறி ‘அதில் மெட்டல் கலக்கிறார்களே. அதெல்லாம் சரிதானா என யோசிப்பார்கள். மக்களிடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் இந்த மூடநம்பிக்கை தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது.
மருத்துவர் யார்?
‘சித்த மருந்துகளில் மெர்குரி கலந்திருக்கிறது' என்றொரு சர்ச்சைக்குரிய செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் சமீபகாலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. நாளிதழ் ஒன்றிலும் அந்தச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னூட்டமாக ‘சித்த மருந்துகள் எதுவும் தரநிர்ணயம் செய்யப்படாதவை' என்பது போன்ற அவதூறுகளும் வேகமாகப் பரவி வருகின்றன.
மருத்துவ முறை வழிகாட்டுதலின்படி ஒரு நோயாளியின் சிகிச்சை அறிக்கையின் அடிப்படையில், மருந்துகளால் ஏற்படும் எந்த ஒரு பின்விளைவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை (Pharmacovigilance) எடுக்கப்பட வேண்டும். இது சித்த மருத்துவத்துக்கும் பொருந்தும். அந்த வகையில் சர்ச்சைக்குரிய சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டத்தைப் பெற்ற சித்த மருத்துவராகவோ, பாரம்பரியச் சித்த மருத்துவராகவோ தெரியவில்லை. அந்த மருத்துவரின் தகுதி குறித்து முறைப்படி விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, மருந்துகளைப் பரிந்துரைக்கத் தகுதி இல்லாத போலி மருத்துவர் ஒருவர் செய்த தவறுக்கு, ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையையே நம்பிக்கையற்ற ஒன்றாக ஊடகங்களில் சித்தரிக்கும் போக்கு வருத்தம் தரும் அதேநேரம், கண்டிக்கத்தக்கதும்கூட.
வேர், மூலிகை
அந்தச் சர்ச்சையில் குறிப்பிட்டுள்ள மிகவும் தவறான பொய்ச் செய்தி, ‘எல்லாச் சித்த மருந்துகளும் செய்து முடித்த பின்னர் மெர்குரியை (பாதரசத்தை) கலந்து தருகிறார்கள்' என்பதுதான். அப்படி ஒரு வழக்கம் எந்தச் சித்த மருத்துவச் செய்முறையிலும் கிடையாது. பொதுவாகவே சித்த மருந்துகளில் கனிமங்களின் பயன்பாடு மிகவும் சொற்பம். அப்படியே இருந்தாலும் முக்கிய, நாட்பட்ட, பிற மூலிகைகளால் குணப்படுத்த இயலாத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் உயர் சித்த மருந்துகளில் மட்டும்தான் உள்ளது.
"வேர்பாரு தழைபாரு, மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே"- என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை இலக்கணம். அதன்படி வேர், மூலிகைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு நோயைத் தீர்க்க இயலாதபட்சத்தில் கடைசிப் பெருமருந்தாக மட்டுமே உப்புகளை, கனிமங்களைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகளைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட சம்பவத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், மருந்துகளைச் செய்துமுடித்துவிட்டு ஒருபோதும் கனிமங்கள் கலக்கப்படுவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மாறாக, ஒரு சில உயர் மருந்துகளில் மருத்துவ மூலப்பொருளாக மட்டுமே சில கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கனிம உருமாற்றம்
சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, ஏன் பெரும்பாலோர் நம்பும் நவீன மருத்துவத்திலும்கூட நேரடி கனிம - ரசாயன மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே சில மருந்துகளின் செய்முறைகள் தொடங்கப்படுகின்றன. அந்தந்த மருத்துவத் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி (National Pharmacopoeia / Formulary Guidance) கடைசியில் அம்மருந்துகள் முறைப்படியான மருந்து வடிவத்தை வந்தடைகின்றன. கடைசியாகப் பயனுக்குரிய மருந்தாக அது மாறும்போது, கனிம மூலக்கூறு வடிவில் இல்லாமல் உப்புகளாக, உடலுக்குத் தீங்கு செய்யாத வடிவத்துக்கு மாறியும் இருக்கும்.
பல்வேறு மூலிகைச் சாறுகளில் பல மணி நேரம் ஊற வைத்தும், பல நாட்கள் அரைத்தும், சாண வறட்டியில் புடமிட்டும்தான் இம்மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பத்தில் பல்லாயிரம் டிகிரி மிகை வெப்பத்திலும், பெரும் அழுத்தத்திலுமே நானோதுகள்களைப் பெற முடியும் என்றுள்ள நிலையில், 100 வறட்டிகளை வைத்துப் புடமிட்டு ஒரு உயர் கனிமத்தை நானோதுகள்களாகப் பெற்ற சித்த மருத்துவ நுட்பத்தை நவீன விஞ்ஞானம் இன்றைக்கும் மெய்சிலிர்த்துத்தான் பார்க்கிறது. இப்படிப்பட்ட நவீன நானோதுகள்களின் மருத்துவப் பயன்கள் ஏராளம்.
உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி
கனிமங்களை மூலப்பொருளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மருந்துகள், நானோ துகள்களாக நுண்மையடைந்து மருந்தாக மாறுவதைப் பல மருத்துவ நூல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் (Standardization of Metal-Based Herbal Medicines, American Journal of Infectious Diseases 5 (3): 200-206, 2009 ISSN 1553-6203 © 2009 Science Publications Corresponding Author: Arun Sudha, Indian Institute of Technology Madras, Chennai- 600 036), பெரும்பாலான மூலிகைகளில் உள்ள கனிமங்கள் உடலைப் பாதிக்காத ஆக்சைடு மற்றும் சல்பைடு வடிவத்தில் மாறுவதாகவும், நேரடியாகக் கனிமங்களை வைத்தே செய்யப்படும் மருந்துகளும்கூட நானோதுகள்களைப் போன்ற நுண்ணிய அளவில் இருப்பதையும் உறுதிசெய்துள்ளது.
அது மட்டுமல்லாமல் மெர்குரி (பாதரசம்), கந்தகத்தை வைத்துச் செய்யப்படும் மிக முக்கியமான சித்த மருந்தான ரசகந்தி மெழுகு குறித்து இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. குஜராத் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் உயரிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆய்வு நிறுவனமும், நவீன ஆய்வு வழிகாட்டுதலின்படி ஒரு நீண்ட ஆய்வை நடத்தி, ரசகந்தியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சென்னையில் இயங்கிவரும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான மறைந்த பேராசிரியர் சரஸ்வதி நடத்திய ஓர் ஆய்வில், பாதரசத்தை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் மருந்து மிகப் பாதுகாப்பானது என நிறுவப்பட்டுள்ளது (அந்த முடிவுகள் இன்னும் நூலாக வெளியிடப்படாமல், அரசு ஆவணமாகவே உள்ளன).
வியந்த உலகம்
மறைந்த நவீன மருத்துவப் பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம், இதே ரசகந்தி மெழுகைக் கொண்டுதான் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் கிருமிகள் கட்டுப்படுத்தப்படுவதையும், நோய் எதிர்ப்பாற்றல் பெருகுவதையும் பற்றி நீண்ட ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வு JAPI எனும் மருத்துவ இதழில் வெளியாகி, உலக மருத்துவத்தின் கண்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் திருப்பப்பட்டன.
இதைத் தாண்டி கனிம மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள்தாம் புற்றுநோய் முதலான சவாலான நோய்களுக்கான மிக முக்கிய சித்த மருந்துகள். Acute promyelocytic leukemia எனும் புற்றுநோய்க்கு இன்றளவும் பெரும் நச்சாகக் கருதப்படும் பாடாணங்களை (Arsenic trioxide) கொண்டு செய்யப்படும் சீன மருந்துகளின் பயன், உலகளவில் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரம்வாய்ந்த British Journal of Haematology எனும் மருத்துவ இதழில், இதன் பயன் குறித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் (Mathews V, Chandy M, Srivastava A. Arsenic trioxide in the management of acute promyelocytic leukaemia. Natl Med J India. 2001;14(4):215-22) கட்டுரையில் கிடைக்கின்றன.
தேவையற்ற குழப்பம்
இன்று சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அரசு பதிவுபெற்ற சித்த மருந்துகளில், மத்திய அரசின் வழிகாட்டுதலில் (AYUSH- Good Manufacturing Practice guidelines) சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரநிர்ணயத்தின் அடிப்படையிலேயே கனிமங்களின் அளவு, வடிவம், செய்கை, நச்சற்ற பாதுகாப்பு நிலை போன்றவை இருந்தாக வேண்டும். ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனமும் அதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை (Quality assurance) மேற்கொண்டு ஆவணப்படுத்த வேண்டும். இதில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய Pharmacovigilance முறை மத்திய, மாநில அரசுகளால் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் எதைப் பற்றியும் அறியாமல், சர்ச்சைக்குரிய சம்பவத்தை விவரிக்கும் செய்தி போலியாய் எச்சரிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையைக் களங்கப்படுத்தும் தொனியிலும், சித்த மருத்துவப் பயனாளர்களைக் குழப்பத்தில் தள்ளும் வகையிலும் உள்ளது.
எத்தகைய மாற்றம் தேவை?
அறம் சார்ந்து சித்த மருத்துவத்தை மேற்கொண்டுவரும் சித்த மருத்துவர்களால் மக்களுக்கு, மருத்துவப் பயனாளிகளுக்கு எவ்விதத் தீங்கும் நிகழக் கூடாது என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. அதற்குச் சித்த மருத்துவம் தொடர்பாக உலகத் தரத்துடன் Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்தப்படவேண்டும் என்பதுதான் சித்த மருத்துவத்தை மேம்படுத்த நினைக்கும் பெரும்பாலோரின் நிலைப்பாடும் முயற்சிகளும்.
ஒரு மருந்து பழமையானது என்பதாலோ, நம்முடைய மரபு என்பதாலோ கொண்டாடாமல், Reverse pharmacology முறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் தவறென்று தெரியவரும் எந்த மருந்தையும் விலக்கி வைக்கவும் நவீன காலச் சித்த மருத்துவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
ஆனால், அதேநேரம் நம் நாட்டு மருத்துவ முறைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல் அவசரமாக இன்றைக்கு வலிந்து வலியுறுத்தப்படும் தரநிர்ணயத்தின் பின்னணியில் பெரும் அரசியல் உள்ளதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தரநிர்ணயங்கள் மக்கள் நலனை மையப்படுத்தியவை அல்ல. பெரும் வணிகச் சந்தையை மையப்படுத்தியவை என்ற உண்மையையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடையே மரபு மருத்துவ முறைகள் முக்கியத்துவம் பெற்றுவரும் பின்னணியிலேயே இது வலியுறுத்தப்படுகிறது.
நமது மரபு மருத்துவ முறைகள் சார்ந்து Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்த அரசிடம் வலியுறுத்துவது அவசியம். அப்படியல்லாமல், ஒரு சில போலி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறை மீது பழிசுமத்துவதும் அந்தத் துறையையே பலியிடச் சொல்வதும் எந்த வகையில் நியாயம்? காலம்காலமாகப் புடம் போடப்பட்டுவரும் சித்த மருத்துவத் தத்துவங்களையும், நெடுங்காலமாகப் பயனில் உள்ள ஆவணங்களையும், அவசரஅவசரமாகப் புறந்தள்ளி, நவீன மருத்துவம் காட்டும் மாற்றத்துக்குரிய ஆய்வுகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு பயன்பட்டுவரும் சித்த மருத்துவத்தை வீணாகத் தூற்றுவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
2015அக்டோபர் 31ந் தேதியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி. 

சனி, 22 ஆகஸ்ட், 2015

கவிழ்தும்பை மருத்துவத் தாவரம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கவிழ்தும்பை பற்றி காண்போம்.


                   குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன.
நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.
இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல் பாட்டை ஊக்குவிக்கின்றன.
கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும். கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.

பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை…

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். பேய் மிரட்டி மருத்துவத்தாவரத்தின் பயன்களை காண்போம்.



            சில குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது கழிச்சல் உண்டாகும். மேலும் குழந்தைகள் ஆறாம் மாதத்தில் தவழும் போதும், எட்டாம் மாதத்தில் எழுந்து நடக்கும் போதும் அருகில் கண்களில் படும் ஒற்றடை, தூசி, இறந்து போன பூச்சிகள், கொசுக்கள், ரோமங்கள் போன்றவற்றை துருதுருவென்ற தங்கள் கண்களால் கண்டுபிடித்து உட்கொண்டு விடுவது குழந்தைகளின் வழக்கம். இதனால் குழந்தைகளின் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, பேதி, சுரம் அதை தொடர்ந்து வலிப்பு, இருமல் உண்டாவதுடன் திடீர் திடீரென வீறிட்டு அழ ஆரம்பிக்கும். மேலும் தோல் வறட்சியடைந்து, சுருங்கி சவலைப் பிள்ளைப் போல் தேறாமல் காணப்படும்.
இதைக்கண்டு பயந்து போகும் பெற்றோர் பேய்,பூதம் என பலவாறாக கற்பனை செய்து கோயில்களிலும், பிற வழிபாட்டு தலங்களிலும் நேர்த்திகளை செய்கின்றனர். இன்னும் சிலரோ முதியோர்களையும், ஆன்மீகவாதிகளையும் அணுகி, குழந்தையின் பயத்தை போக்க, மந்திரிக்கும்படி கூறுகின்றனர். அவர்களும் கயிறு போன்ற சில பொருட்களை கொடுத்து குழந்தையின் மணிக்கட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் கால்களில் தாயத்து போல் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு கட்டும் பொருட்களில் பெரும்பாலும் மூலிகை வேர்களே அடங்கியுள்ளன.
இந்த மூலிகை வேர் நிறைந்த தாயத்துகளை குழந்தை வாயிலிட்டு சப்பும்போதும், மூக்கால் உறிஞ்சும்போதும் அவற்றின் மருத்துவ குணத்தால் குழந்தையின் உபாதைகள் நீங்குகின்றன.
குழந்தைகளுக்கு தோன்றும் இது போன்ற நோய்களை கட்டுப்படுத்தி, உடலை நன்னிலைப்படுத்தும் அற்புத மூலகை பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை. அனிசோமீல்ஸ் மலபாரிக்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும் பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் வேரில் பீட்டா சைட்டோஸ்டீரால், லுட்டுலினிக் அமிலம், ஓவாடியோலிட், அனிசோமிக் அமிலம், ஜெரானிக் அமிலம் ஆகியன உள்ளன. இவை செரிமானத்தை தூண்டி, குடலின் இயங்கு தன்மையை கட்டுப்படுத்துகின்றன.
பெருந்தும்பை இலைகள்-5 எடுத்து சிறு,சிறு துண்டுகளாக வெட்டி, 200 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 50 மி.லி.,யாக சுண்டியப்பின். வடிக் கட்டி காலை, மாலை குழந்தைகளுக்கு கொடுத்து வர பேதி, செரிமானமின்மை நீங்கி தெளிவுறும், 5 அல்லது 10 சொட்டுகள் இந்த இலைச்சாற்றை தேனுடன் குழப்பிக் கொடுக்க, பல் முளைக் கும் காலங்களில் தோன்றும் பிள்ளைக்கழிச்சல் நீங்கும். இதன் வேரை சுத்தம் செய்து உலர்த்தி, நூலில் சுற்றி மணிக்கட்டில் காப்பு போல் கட்டிவர குழந்தைகள் விரல் சப்பும் பொழுது இதன் மருத்துவச் சத்துக்கள் உள்ளிறங்கி, குழந்தைகளுக்கு வயிற்றில் தோன்றும் பலவித வயிற்று உபாதைகள், பயம் ஆகியவற்றை நீக்கி குழந்தையை தேறச் செய்யும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

சளித் தொல்லைக்கு மருந்து.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். சளித்தொல்லையா கவலைப்படாதீங்க..
                       வேலிப்பருத்தி என்னும்   உத்தாமணி இலைச்சாறு 5 மில்லி, தூதுவளைச் சாறு 5 மில்லி, துளசிச் சாறு 5 மில்லி கற்பூர வள்ளி இலைச்சாறு 5 மில்லி வெற்றிலைச்சாறு 5 மில்லி எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும். 
எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடியுங்க,சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச்சை சாற்றை காபியில் கலந்து குடியுங்க தலைவலி நீங்கும்.எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்கவைத்து குடியுங்க நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
கடல் அழிஞ்சில் பட்டை,திப்பிலி,தாளிசபத்திரி இம்மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இவற்றில் தினமும் இரண்டு கிராம் பொடியை இரண்டு வேளை வீதம் தேனில் குழைத்து சாப்பிடுங்க,சளி,தும்மல்,இருமல்,அலர்ஜி ஆகியவை காணாமல் போகும்.
 அரைக்கீரை தண்டுடன் மிளகு,மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில்  குடியுங்க சளி,இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.
ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடுங்க சளித்தொல்லை குணமாகும்.
ஆலமர விழுதை பொடி செய்து காலை மாலை இருவேளை சாப்பிடுங்க இருமல் குணமாகும்.
அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிடுங்க மார்புச்சளி குணமாகும்.
கடுகை பொடி செய்து தொண்டையில் பற்று போடுங்க தொண்டை வலி குணமாகும்.
வெள்ளைப்பூண்டு பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடுங்க சளித்தொல்லை நிங்கிவிடும்.
பூண்டு,சிறிது புளி,மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிடுங்க..சளித்தொல்லை குணமாகும்.
மிளகாய் வற்றல்,தேங்காய்த்துருவல் இரண்டையும் ஒருநாள் முழுவதும் வெயிலில் காயவைத்து பிறகு அவற்றுடன் தோலுரிக்காத பூண்டு,உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிடுங்க.சளித்தொல்லை நீங்கும்.

வியர்வை நாற்றமா?

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். வியர்வை நாற்றமா கவலையே வேண்டாம். எலுமிச்சை 
வியர்வை நாற்றத்தை நீக்கும் .அரைப்பழம் எலுமிச்சையை உடல் முழுவதும் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளியுங்க.குளிக்கும்போது சோப்பு போடாதீங்க,குளித்த பிறகு எவ்வித வாசனை திரவியங்களோ,பவுடரோ பயன்படுத்தாதீங்க. காலை முதல் மாலை வரை உடலில் வியர்வை நாற்றம் வருகிறதா? என சோதித்துப் பாருங்க..தினமும் எலுமிச்சை பழம் உடலுக்கும்,தலைக்கும் தேய்த்துக்குளியுங்க..முடிந்தவரை மாமிச உணவுகளையும்,மைதா மாவு சம்பந்தப்பட்ட உணவுவகைகளும் தவிருங்க..மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்க வியர்வை நாற்றமும் பெருமளவு குறையும்...